கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிப்பது எப்படி!


பொதுவாக கம்ப்யூட்டர்களில் எத்தகைய தொழில் நுட்பங்கள் வந்தாலும், வேகம் இல்லை என்றால் அந்த தொழில் நுட்பத்தினை பயன்படுத்தும் ஆர்வம் வெகுவாக குறைந்துவிடும்.
சொந்த பயன்பாட்டிற்காக பயன்படு்ததும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி, வேலை நிமித்தமாக பயன்படு்த்தும் கம்ப்யூட்டர்களாக இருந்தாலும் சரி நாளடைவில் இதன் வேகம் குறைய ஆரம்பித்துவிடுகிறது.
இதற்கு முதலில் தேவையில்லாத ஃபைல்களை கம்ப்யூட்டர்களில் இருந்து அழிப்பது நல்லது. அன்றாடம் அப்படி தேவையில்லாத ஃபைல்களை டெலிட் செய்தும், கம்ப்யூட்டரின் வேகம் குறைவதாக இருந்தால் நாமாகவே சின்ன சின்ன முயற்சிகளை செய்து கம்ப்யூட்டரின் வேகத்தினை அதிகரிக்கலாம்.
முதலில் ஸ்டார்ட் பட்டனை அழுத்தி —> அதில் ப்ரோக்கிராம் பட்டனை அழுத்த வேண்டும். அதன் பின் அக்சஸரீஸ் பட்டனை அழுத்தி —> சிஸ்டம் டூல்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்தால் டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டர் என்ற ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷன்களில் க்ளீன் அப் என்ற பட்டனை க்ளிக் செய்தால் தேவையில்லாத ஃபைல்கள் அனைத்தும் அகற்றப்படும் .
உதாரணத்திற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள டீஃப்ரேக்மென்ட் செய்வதன் படத்தினை பார்க்கவும். இதில் டீஃப்ரேக்மென்ட் என்ற பட்டனை அழுத்தி, எளிதாக சிதறி கிடக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம்.
இதன் மூலம் ‘சி’ ட்ரைவில் ஆங்காங்கே சிதறி இருக்கும் ஃபைல்களை வரிசைப்படுத்தலாம். பயன்படுத்தாத சில ஃபைல்கள் அடுத்து அடுத்து சேர்ந்து கொண்டே போவதன் மூலம் கூட கம்ப்யூட்டரின் வேகம் குறைய ஆரம்பிக்கும்.
வாரம் ஒரு முறை டிஸ்க் க்ளீன் அப் மற்றும் டிஸ்க் டீஃப்ரேக்மென்ட்டேஷன் செய்து கொள்வது, கம்ப்யூட்டரின் வேகம் குறையாமல் இருக்க உதவும். இந்த சின்ன விஷயங்கலெல்லாம் தினமும் கம்ப்யூட்டரினை பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் செய்ய முடியும்.

Source: gizbot.com

வயிற்றில் புண் இருக்கா? சீமைதுத்தி கீரை சாப்பிடுங்க!


உண்ணும் உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகவேண்டும். அப்பொழுதுதான் உணவில் உள்ள சத்துக்குள் கிரகிக்கப்பட்டு கழிவுகள் எளிதில் வெளியேறும். அதனால் வயிற்றினை நமது நண்பனாக நினைத்து எளிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். ஆனால் இன்றைக்கு பலரும் அதிக காரமுள்ள உணவுகள், பல்வேறுவகையான வேதிப்பொருட்கள், மாத்திரைகள் ஆகியவற்றை உட்கொள்வதால் வயிறு புண்ணாகிவிடுகின்றன.
இன்றைக்கு நாம் உட்கொள்ளும் உணவுகள் பெரும்பாலும் வெப்பத்தில் சமைக்கப் பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக வெப்பத்தில் கரையக்கூடிய அல்லது ஆவியாகக்கூடிய சத்துகள் சமைக்கும் பொழுது ஆவியாகிவிடுவதால் நமக்கு உண்ணும் உணவின் பலன் கிடைப்பதில்லை. ஆகையால் வயிற்றில் புண்கள் உண்டாகின்றன. நமது உணவிலுள்ள ஒவ்வாத பொருட்கள் மற்றும் நச்சுத்தன்மையுள்ள உரம், பூச்சி மருந்து ஆகியவை உணவுப்பாதையை சேதப்படுத்துகின்றன.

உணவுப்பாதையில் புண்களை உண்டாக்கி, அவற்றில் நுண்கிருமிகளின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துகின்றன. இதனால் கடுமையான குடற்புண்களும், உணவுப்பாதை சார்ந்த நோய்களும் உண்டாகின்றன. ஒவ்வாத உணவுகள் அல்லது பயன்படாத உணவுகளை உட்கொள்வதால் இரைப்பை அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. இதன் தொடர்ச்சியாக உணவை செரிப்பதற்கு அதிகமான ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உற்பத்தி செய்து, இரைப்பையின் உட்சுவர்களையும் சேதப்படுத்துகின்றன.
இந்த புண்களின் விளைவால் முறையே ஏப்பம், நெஞ்சுகரித்தல், உணவு உண்டபின் வயிற்றுவலி, பித்தவாந்தி பின் மலம் கழிக்கும்பொழுது கறுப்பாக மலம் செல்லுதல் அல்லது உறைந்த ரத்தம் வெளியேறுதல் ஆகியன படிப்படியாக தோன்றும். இவ்வாறு தோன்றும் உணவுப்பாதையில் ஏற்படும் புண்களை கட்டுப்படுத்தாவிட்டால் இரைப்பை, குடல் போன்றவற்றில் ஓட்டை விழுந்து, உயிருக்கு ஆபத்து ஏற்படும். அவசரகால சிகிச்சையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று அச்சுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
உணவுப்பாதையில் புண்கள் ஏற்படாமல் தடுக்க எளிதாக செரிக்கக்கூடிய பச்சை காய்கறி, பழங்கள், பழச்சாறுகள், கீரைகள் ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாம் முறை அரிசி கழுவிய நீர் குடலுக்கு நல்லது. வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதனை உட்கொள்ளலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
உணவுப்பாதையில் தோன்றும் பல்வேறு வகையான உபாதைகளை நீக்கி, இரைப்பை மற்றும் குடலுக்கு வலிமையை தரும் மூலிகை சீமைதுத்தி. இந்தச் செடிகளின் பூ மற்றும் பிற பாகங்களும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. சீமைதுத்தி இலைச்சாற்றை 10 மிலியளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேனுடன் கலந்து, தினமும் ஒரு வேளை சாப்பிட வயிற்றுப்புண்கள் ஆறும். மிளகுத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிடுவதுபோல் சீமைதுத்தி இலை மற்றும் பூவிதழ்களை சமைத்து, கீரையாகவோ அல்லது தண்ணீர்ச்சாறு செய்தோ சாப்பிட்டுவர பல்வேறு வகையான குடற் புண்கள் ஆறும்.
சீமைத்துத்தியின் பூ மற்றும் இலைகளிலுள்ள பிளேவனாய்டுகள் கேம்பரால், குர்சிட்டின், டையோஸ்மெட்டின், பாலிபினாலிக் அமிலங்கள் மற்றும் கவுமாரிக் அமிலங்கள் பல்வேறு வகையான நுண்கிருமிகளை நீக்கி, வயிறு மற்றும் சிறுநீர்ப்பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்து கின்றன. சீமைதுத்தி இலைகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, கீரைபோல் நீராவியில் வேகவைத்து, கடைந்து சாப்பிட குடற்புண்கள் நீங்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்

மன்மதன் 2-ல் திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 நாயகிகள்!


சிம்பு நடிக்கும் மன்மதன் 2 படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்பட 6 பேர் நடிக்கின்றனர்.
சிம்பு, ஜோதிகா நடித்த மன்மதன் படம் 2004-ல் வெளியானது. ஏஜே முருகன் என்பவரை இயக்குநராக அறிவித்து, பின்னர் அவரை டம்மியாக்கிவிட்டு சிம்புவின் பெயரை பிரதானப்படுத்தினார்கள். இப்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறாராம் சிம்பு.
தலைப்பு 'மன்மதன் 2'. சிம்பு இப்போது நடித்துக் கொண்டிருக்கும் வாலு, வேட்டை மன்னன், போடா போடி படங்கள் முடிந்ததும் 'மன்மதன்2' படப்பிடிப்பு துவங்குகிறது.
இப்படத்தில் சிம்பு ஜோடியாக 6 கதாநாயகிகள் நடிக்கின்றனர்.
திரிஷா, அனுஷ்கா, தமன்னா, இலியானா உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் மன்மதனில் நடித்த சிந்து துலானி, மந்த்ரா பேடி ஆகியோரும் நடிக்கக் கூடும் என்கிறார்கள். மேலும் சில நடிகைகளுடன் பேசி வருகிறார்களாம்!

இணையதளங்களை தவறாக பயன்படுத்தும் சிறுவர்கள்!


உலக அளவில் இணைய தளத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. பெரியவர் சிறியவர் என்ற வேறுபாடு இன்றி இப்போது அனைவரும் இந்த இணைய தளத்தைப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியே.
ஆனால் எந்த அளவிற்கு இணைய தளத்தின் பயன்பாடு அதிகரிக்கிறதோ அந்த அளவிற்கு இணைய தளத்தைத் தவறாக பயன்படுத்துவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக சிறுவர்கள் இணைய தளத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என்ற அதிர்ச்சி செய்தியும் வருகிறது. அதிலும் குறிப்பாக 8 முதல் 17 வயதிற்குட்பட்ட 53 சதவீத இந்திய சிறுவர்கள் இணைய தளத்தைத் தவறான நோக்கத்துடன் பயன்படுத்துகின்றனர் என்று ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
இந்தியா உள்பட 25 நாடுகளைச் சேர்ந்த 8 முதல் 17 வயதிற்குட்பட 7600 குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட குளோபல் யூத் ஆன்லைன் பிகேவியர் சர்வே என்ற இந்த ஆய்வில் இந்தி பகீர் தகவல் வந்திருக்கிறது.
இணைய தளத்தில் சிறுவர்கள் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு மரியாதை கொடுக்கின்றனர் மற்றும் இணைய தளத்தை தங்கள் குழந்தைகள் பயன்படுத்தும் போது அதைப் பெற்றோர்கள் எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்று ஆய்வு செய்வதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இணைய தளத்தில் சிறுவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது அனைவருடைய கடமையாகும். குறிப்பாக பெற்றோர், ஆசியரியர்கள், கல்வியாளர்கள், பயற்சியாளர்கள், அரசாங்கம் மற்றும் குழந்தைகள் போன்றோர் குழந்தைகளை சரியான முறையில் இணைய தளத்தைப் பயன்படுத்த பழக்க வேண்டும் என்று மைக்ரோசாப்ட்டின் இயக்குனர் ஜாக்குலின் பயக்கீர் கூறுகிறார்.

கிரெடிட் கார்டு நல்லதா? கெட்டதா?


கிரெடிட் கார்டு வேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கிய பலரும் இன்றைக்கு அதை தலையை சுற்றி தூரப்போடும் வேலையை செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஏதோ சூனியத் தகட்டினை வாங்கிவிட்டோமோ என்று அஞ்சும் சூழ்நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் எந்த ஒரு பொருளையுமே நமக்கு ஏற்றதாக பயன்படுத்தினால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறும் நிபுணர்கள் கிரெடிட் கார்டில் உள்ள நன்மை, தீமைகளை பட்டியலிட்டுள்ளனர்.
கிரெடிட் கார்டு ஜாக்கிரதை
கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப்போல சுமார் நான்கு மடங்கும், பெர்சனல் லோனைப்போல சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது கிட்டத்தட்ட 35 முதல் 40 சதவிகிதம் என்கிற அளவில் இருக்கும்.
கிரெடிட் கார்டுக்கு வட்டி போக வேறு பல கட்டணங்களும் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் பணம் கட்டவில்லை என்றால் தாமதக் கட்டணம் விதிக்கப்படும். இது பாக்கித் தொகையைப் பொறுத்து சுமார் 250 ரூபாயில் தொடங்கி 700 ரூபாய் வரை கட்ட வேண்டியிருக்கும்.
கிரெடிட் கார்டு கடன்களை ரொக்கமாக கட்டினால் சில முன்னணி வங்கிகள் 100 ரூபாய் வரை அபராதம் விதிக்கின்றன. அவை காசோலை அல்லது டி.டி மூலமே கட்ட வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
கிரெடிட் கார்டு நல்லதிற்கே
கிரெடிட் கார்டு மூலம் அவசரத்தேவைக்கு கடன் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் பெர்சனல் லோனை விட வட்டி அதிகம்.
கிரெடிட் கார்டு மூலம் இன்சூரன்ஸ் பிரீமியம், தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போன்றவை இருக்கின்றன. இவை கட்டுவதற்கு பரிமாற்றக் கட்டணம் எதுவும் இருக்கிறதா என்பதை அறிந்து கொண்டு செயல்படவும்.
கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொருட்களுக்கான பணத்திற்கு 45 முதல் 51 நாட்கள் வரை வட்டி கட்ட வேண்டியதில்லை.
ஒவ்வொரு கிரெடிட் கார்டு நிறுவனமும் ஒரு பில்லிங் சுழற்சியை வைத்திருக்கிறது. இதனால் நமக்கு கிடைக்கும் சலுகைக் காலத்தை சரியாகப் பயன்படுத்தினால் வட்டியே இல்லாமல் ஊரார் பணத்தில் ஈஸியாக பல பொருட்களை வாங்கலாம்.
அதேபோல் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி தொகையை சரியான தேதியில் கட்டி வந்தால், ரிவார்டு புள்ளிகள் மூலம் கணிசமான தொகை கிடைக்கும்.
ஆனால் எந்த நேரத்திலும் பின்னால் வரப்போகிற பணத்தை நம்பி கிரெடிட் கார்டில் பொருட்களை வாங்காதீர்கள் அதுவே ஆபத்தாகிவிடும்.

English summary
Credit cards are quick and easy to use, even if you are abroad. You can access finance up to your credit limit at any time, making them very useful for dealing with unexpected costs. Most credit cards have relatively high rates of interest compared to loans and other finance; this means that if you allow interest to accrue the cost of using credit cards can be very high.

Source: 
goodreturns.in

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More