Showing posts with label வைகோ. Show all posts
Showing posts with label வைகோ. Show all posts

இலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ

"தமிழக மக்களின் உணர்வை பிரதிபலித்த சட்டசபை தீர்மானத்தையும், ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தி பேசிய கோத்தபய ராஜபக்ஷேயை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டும்' என, வைகோ வலியுறுத்தினார். இலங்கையில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், ராஜபக்ஷே மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ம.தி.மு.க., சார்பில், டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களை கண்டித்தும், அந்நாட்டு அதிபரை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டுகோள் விடுத்தும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை, இலங்கையின் ராணுவச் செயலர் கோத்தபய ராஜபக்ஷே, கேலி செய்துள்ளார். தமிழக முதல்வரை அவமதிக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தீர்மானம், ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக் கூடியது. அதை இழிவுபடுத்தவும், அலட்சியப்படுத்தவும் துணியும் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பாடம் புகட்டும் வகையில், இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கை உடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும். அந்நாட்டின் மீது பொருளாதார தடையும் விதிக்க வேண்டும். சிங்கள ராணுவ வீரர்களுக்கு, இந்தியாவின் பல இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாம்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். சிங்கள வீரர்களை வெளியேற்ற வேண்டும்.

கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகிய நாடுகள் தனிநாடுகளாக அங்கீகரிக்கப்பட்டு விட்டன. அதேபோல, ஓட்டெடுப்பு நடத்தி, அதன்மூலம் தமிழர்களுக்கும் இலங்கையில் தனி நாடு கிடைக்கச் செய்ய வேண்டும். பிரதமர் மன்மோகன் சிங்கையும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் நேரில் சந்தித்தபோது ராஜிவ் கொலை வழக்கு தூக்கு தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டேன். தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. எதற்கும் ஒரு எல்லை உண்டு. தமிழர்கள் என்றாலே துச்சமாக நினைத்து செயல்படும் போக்கை, மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு வைகோ பேசினார்.

தமிழ் ஈழம் உருவாக்கக் கோரி வைகோ தலைமையில் டெல்லியில் அறப்போர்

தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும். இதற்காக ஐ.நா. அவை கருத்துக் கணிப்பை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் ஆகஸ்ட் 12ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மாபெரும் அறப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள சிங்கள ராணுவத்தையும், போலீசையும் உடனடியாக அகற்றவும், சிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பதோடு, அக்கிரமமாகக் குடியேறியவர்களை வெளியேற்றவும், இந்திய அரசும், உலக நாடுகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கு, சுதந்திரத் தமிழ் ஈழ தேசம் மட்டுமே தீர்வாக முடியும்.

எனவே அதற்கான பொது வாக்கெடுப்பை அனைத்து உலகப் பார்வையாளர்கள் கண்காணிப்பில் நடத்துவதற்கும், அந்த வாக்கெடுப்பில் உலகின் பல நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளிலேயே அந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவுமான நடவடிக்கைகளை ஐ.நா. மன்றம் முன்னெடுப்பதற்குமான கோரிக்கைகளை வலியுறுத்தவும்;

இதற்கு இந்தியாவில் கட்சி, மாநில எல்லைகளைக் கடந்த ஆதரவைத் திரட்டவும், ஆகஸ்ட் 12 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில், நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள ஜந்தர் மந்தரில், என்னுடைய தலைமையில் அறப்போர் ஆர்ப்பாட்டத்தை மதிமுக நடத்த இருக்கின்றது.

ஈழத்தமிழ் உணர்வாளர்களும் இந்த அறப்போரில் பங்கு ஏற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் வைகோ.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More