Showing posts with label murugan. Show all posts
Showing posts with label murugan. Show all posts

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள்?!: சீமான் கேள்வி!

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...:

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 பேர் ஊர்வலம்; சத்யராஜ் தொடங்கி வைத்தார்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி சென்னையிலிருந்து வேலூர் வரை 500 இருசக்கர வாகனங்களில் 1000 பேர் ஊர்வலம் சென்றனர்.

இதனை நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழி நெடுக பல கிராமங்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மக்கள் இதற்கு பெரும் ஆதரவை அளித்தனர்.

இதுவரை இப்படி ஒரு பெரு முழக்கக் கூட்டத்தை வேலூர் சிறைச்சாலை காவலர்கள் பார்த்ததில்லை எனும் அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஊர்வலம் இது.

சிறைச்சாலை வந்தடைந்ததும் ஓங்கி முழக்கமிட தொடங்கிய தமிழுணர்வாளர் படையை கண்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சியுற்றனர் சிறைக் காவலர்கள்.

தாரை தப்பட்டைகளை முழக்கி பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி மீண்டும் மீண்டும் முழக்கங்களை எழுப்பினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்க கோரி மனித சங்கிலி- வைகோ

ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்கள், உள்ளம் வேதனைத் தீயால் வெந்து கொண்டு இருக்கின்ற நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களை காக்க வேண்டும். அறிவிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையைத் தடுக்க வேண்டும்.

மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்து உள்ளவாறு, 22-ம் தேதி திங்கள் கிழமை மாலை, தலைநகர் சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழ் உணர்வாளர்களின் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கு ஏற்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் நடைபெறுகின்ற இந்த முக்கியமான கூட்டத்தில், நானும் பங்கு ஏற்கிறேன். கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். வருகின்ற 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வணிக பெருமக்கள், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் மூன்று உயிர் காக்கும் மனித நேயத்தோடு பங்கு ஏற்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன். குறிப்பாக, தாய்மார்கள் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More