Showing posts with label தமிழக செய்திகள். Show all posts
Showing posts with label தமிழக செய்திகள். Show all posts

'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி! - காணொளி இணைப்பு

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.

திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.


நடிகர் விஜய்காந்தின் தேமுதிக மக்களுடன் தான் கூட்டணி என்று உலக நியாயம் எல்லாம் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்தது.


மதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சியை தேர்தலுக்குத் தேர்தல் இடப் பங்கீட்டில் ஏமாற்றுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளன திமுகவும் அதிமுகவும்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை எப்போது யாருடன் எதற்காக கூட்டணி சேருவார்கள், எதற்காக விலகுவார்கள் என்பது அவர்களுக்கே சரியாகத் தெரியாது.


சின்னச் சின்னக் கட்சிகளைப் பொறுத்தவரை யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி சேர்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் அவர்களை கூட்டணியில் சேர்க்க திமுக, அதிமுக இடையே போட்டா போட்டி நிலவியது. ஆனால், இப்போது அந்தக் கட்சியை எவ்வளவு தூரத்தில் வைத்திருப்பது என்பது கடும் போட்டி நிலவுகிறது.


இது தான் தமிழகத்தில் இதுவரை நடந்து வந்த கதை.


ஆனால், 'உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக' என்பது மாதிரி இந்த முறை காங்கிரசை நடுத் தெருவில் விட்டுவிட்டது திமுக. வழக்கமாக திமுகவால் கைவிடப்படுவோர் அதிமுகவால் கைதூக்கி விடப்படுவதும், அதிமுகவால் கைவிடப்பட்டோர் திமுகவிடம் சரணடைவதும் வழக்கம்.


இந்த முறை அது நடக்கவில்லை. காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை. சரி, தேமுதிகவின் முதுகில் ஏறியாவது கங்காரு பயணம் போகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த சில முயற்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. இவர்களுக்காக தேர்தல் வேலை பார்த்துவிட்டு, அவர்களிடம் திமுகவும் அதிமுகவும் பட்ட அவமானங்களை மனதில் கொண்டு, காங்கிரஸை உடன் சேர்க்க மறுத்துவிட்டார் விஜய்காந்த்.


ஆக திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இன்னும் அதிமுகவுடன் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இது அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கா அல்லது 2014 மக்களவைத் தேர்தலுக்கா என்பது தெரியவில்லை. அவ்வளவு சாவகாசமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள் அதிமுகவிடம் பணிந்து போவதை கண்டு சகிக்காமல், தங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அப்படி ஏதும் இதுவரை சலசலப்புகள் இல்லை. அதிமுக தருவதை தா.பாண்டியன் வாங்கிக் கொள்வார் போலிருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால், இந்திய கம்யூனிஸ்டும் கடுமையான நிலையை எடுக்க வேண்டி வரலாம். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எடுப்பாரா என்பது தெரியவில்லை.


தேமுதிகவையும் அதிமுகவையும் சட்டமன்றத் தேர்தலில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர் இந்த முறையும் கூட்டணியைக் காக்க முயன்றதாகவும், ஆனால், அவரது யோசனையை அதிமுக தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது.


இதனால் அதிமுகவை விட அந்த அதிபுத்திசாலி மீது தான் அதிக கடுப்பில் இருக்கிறார் விஜய்காந்த் என்கிறார்கள்.


அதிமுகவை முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலிலேயே கையாண்டும் காட்டிவிட்டார் விஜய்காந்த். அதாவது, தங்களுடன் இடப் பங்கீடு பேச்சு நடத்த தேமுதிக போயஸ் தோட்டத்தில் வந்து வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிமுக நினைக்க, தேவைப்பட்டால் நீங்கள் தான் எங்களை அழைக்க வேண்டும் என்றரீதியில் பேச்சுவார்த்தைக்கே வரவில்லை தேமுதிக.


இது அதிமுகவுக்கு தேமுதிக தந்த முதல் ஷாக். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய பதவிகளுக்கெல்லாம் வரிசையாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், விஜய்காந்த் ஓடி வருவார் என்று நினைத்து ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டுக் கொண்டே போக, அது குறித்து ஒரு கருத்து கூட தெரிவிக்காமல் அமைத்து காத்து அடுத்த 'நோஸ்-கட்' தந்தார் விஜய்காந்த்.


இந் நிலையில் தேமுதிகவின் அமைதி அதிமுகவுக்கு கோபத்தைத் தர, அடுத்தடுத்த பட்டியல்களையும் அதிமுக வெளியிட, தடாலடியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் விஜய்காந்த்.


அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்றோ, தனித்துப் போட்டியிடுகிறோம் என்றோ ஒரு அறிக்கை விட விடவில்லை விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒன்னுமே நடக்காதது போல தடாலடியாக நடந்து கொள்வது வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அதே பாணியில் செயல்பட்டு அந்தக் கட்சிக்கே ஷாக் தந்துள்ளார் விஜய்காந்த்.


இப்படியாக இடதுசாரிகள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த முக்கியக் கட்சிகள் தவிர்த்து புதிய தமிழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை, பாஜக ஆகியவையும் உள்ளன. இதில் பாஜகவும் கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன. இதையும் கணக்கில் சேர்த்தால் '8 பிளஸ்' முனைப் போட்டி உருவாகியுள்ளது எனலாம்.


இடதுசாரிகளும் தனியே வந்தால் '9 பிளஸ்' முனைப் போட்டி உருவாகும்.


இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.


தமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது- ஜெ. ஆவேசம்

தமிழகத்தை வாழ விடுவதில்லை, அதை அனுமதிப்பதில்லை என்று மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் அநீதியை தகர்த்து தமிழக மக்களுக்கு நாங்கள் நன்மை செய்வோம் என்று முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. அப்போது சிபிஐ உறுப்பினர் ஆறுமுகம் பேசுகையில்,

வால்பாறையில் இரவில் யானைகள் பயம் உள்ளது. தீப்பந்தங்களை காட்டினால் யானைகள் ஓடிவிடும். இதற்காக அங்குள்ள மக்களுக்கு கூடுதல் மண்எண்ணெய் வழங்க வேண்டும் என்றார்.

அப்போது எழுந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு என்ன காரணத்தினாலோ கடந்த ஜூன் மாதத்திலிருந்து தமிழகத்துக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை குறைத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினோம். நேரிலும் வலியுறுத்தினோம்.

ஆனால் என்ன காரணத்தினாலோ நமக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைந்து வருகிறது என்றார்.

பின்னர் தொடர்ந்து பேசிய ஆறுமுகம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு இதன் மூலம் மத்திய அரசு தடையாக இருப்பதாகத்தான் தெரிகிறது. இதை எதிர்த்து இடதுசாரிகள் போராடி வருகிறோம். மக்கள் தான் வருவதில்லை என்றார். மக்கள் வருவதில்லை என்று அவர் கூறியதைக் கேட்டு உறுப்பினர்கள் வாய் விட்டுச் சிரித்தனர்.

பின்னர் பேசிய சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி, உறுப்பினர் ஆறுமுகம் சொல்வது தவறு. இடதுசாரிகள் கடந்த 5 ஆண்டுகளாக மக்களை திரட்டி போராடி வந்ததால்தான் ஆட்சி மாற்றமே ஏற்பட்டது. எனவே மக்கள் வரவில்லை என்று கூற வேண்டாம் என்றார்.

மீண்டும் தனது பேச்சைத் தொடர்ந்த ஆறுமுகம், நாம் எதிர்பார்த்த அளவுக்கு மக்கள் வரவில்லை என்று தான் கூறினேன். ஆட்சி மாற்றத்துக்கு முக்கிய காரணம் உச்சபட்ச இமாலய ஊழலும், முறைகேடுகளும்தான் என்றார்.

இதையடுத்து குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மக்களின் உரிமைக்காக மத்திய அரசை எதிர்த்து நாங்களும் போராடுகிறோம். நீங்களும் வாருங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மக்கள் நிச்சயம் வருவார்கள் என்று தெரிவித்தார்.

இதைடுத்துப் பேசிய ஆறுமுகம், இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம். இடதுசாரிகளுடன் முதல்வர் சேர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.

பின்னர் பேசிய சிபிஎம் தலைவர் செளந்தரராஜன், மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை பாரபட்சத்துடன் நடத்துகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வருவது மட்டுமல்ல, நமது தேவைக்கு வெளியில் வாங்க விரும்பினாலும் அதற்கு அனுமதி வழங்குவதில்லை.

மண்ணெண்ணெய் மட்டுமல்ல தமிழகத்துக்கு தேவையான டி.ஏ.பி. உரத்தையும் போதுமான அளவுக்கு வழங்க வில்லை. பிரதமரிடம் வலியுறுத்தியும் கூட மத்திய அரசு இந்த வகை உரத்தை குறைத்துதான் வழங்குகிறது.

நான் பலமுறை தெரிவித்து விட்டேன். மாநில அரசின் நிதி ஆதாரம் மிகக் குறைவாக இருக்கிறது. அதை வைத்து எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு செய்து இருக்கிறோம். மத்திய அரசும் போதிய நிதி வழங்கவில்லை. நிதி பிரச்சனை மட்டுமல்ல மாநில அரசின் பல்வேறு அதிகாரங்களை வருவாய்களை அத்தனைஇனங்களிலும் மத்திய அரசு பறித்துவிட்டது. தற்போது மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய ஒரே இனம் வாட் வரி விதிப்பு தான்.

இதை வைத்துக்கொண்டு இத்தனை திட்டங்களையும் உருவாக்கி செயல்படுத்தி வருகிறோம். இதை விட கூடுதலாக செய்ய வேண்டும் என்ற மனமும் ஆசையும் எங்களுக்கு உண்டு. நீங்கள் முன் வைக்கிற கோரிக்கைகளை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும் என்று எண்ணம் உண்டு. ஆனால் நிதி தட்டுப்பாடு காரணமாக எங்கள் கைகள் கட்டுப்பட்டுள்ளன. அந்த கட்டுப்பாட்டை தகர்த்து பகீரத முயற்சி செய்து தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்வோம்.

மத்திய அரசு எத்தனை தடைகளை விதித்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்து தமிழக மக்களுக்கு நன்மை செய்வோம்.

தமிழ்நாட்டை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதை சொல்வதற்கு நான் வேதனைப்படுகிறேன். ஆனால் அதுதான் உண்மைா. தமிழகம் வாழக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. அப்படித்தான் அது செயல்படுகிறது.

எனவே ஜனநாயகத்துக்குட்பட்டு தமிழக மக்களுக்கு நிச்சயம் நன்மை செய்தே தீருவோம் என்றார். இதைக் கேட்டதும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின்

உறுப்பினர்கள் மேசைகளைப் பலமாக தட்டி முதல்வரின் பேச்சை வரவேற்றனர்.

அடுத்தடுத்து மத்திய அரசுக்கு கடும் கண்டனம்

நேற்றுதான் சட்டசபையில் கோத்தபயாவின் பேச்சைக் குறிப்பிட்டு முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக பேசினார். அப்போது மத்திய அரசு வாய் மூடி மெளனமாக இருப்பதால்தான் கோத்தபயா போன்றவர்கள் தமிழகத்தை இழித்துப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய அரசு தமிழகத்தை வாழ விடக் கூடாது என்று செயல்பட்டு வருவதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More