Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்

நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அதிசயங்களில் ஒன்று காதல் சின்னமான தாஜ் மஹால். 358 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாகக் கட்டிய பளிங்கு மாளிகை தான் தாஜ் மஹால். உத்தர பிரதேச மாநிலத்தி்ல் உள்ள ஆக்ராவில் யமுனா நதிக்கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைதியாகக் காட்சித் தரும் தாஜ் மஹாலைப் பார்க்க ஆண்டு ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆக்ரா வருகின்றனர்.

தாஜ் மஹால் அமைந்திருக்கும் யமுனா நதி, நிறுவனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளது. இதனால் தாஜ் மஹாலின் அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. இப்படியே விட்டுவிட்டால் அடித்தளம் முழுவதுமாக அரிக்கப்பட்டு தாஜ் மஹால் விழுந்துவிடும்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 2 முதல் 5 ஆண்டுகளில் தாஜ்மஹால் இடிந்துவிடும் என்று ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கதேரியா டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்டிடக் கலையின் அதிசயமாகத் திகழும் தாஜ் மஹால் ஏற்கனவே பொலிவிழந்து வருகிறது. யமுனா நதியில் தண்ணீர் இல்லாததால் மரத்தால் ஆன அடித்தளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதன் அடித்தளத்தைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடித்தளம் நன்றாக இருக்கின்றது என்றால் எதை மறைக்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து பேராசிரியர் ராம் நாத் கூறுகையில், தாஜ் மஹால் யமுனா நதியின் கரையோரம் அமைந்துள்ளது. ஆனால் தற்போது யமுனா நதி வற்றிவிட்டது. இதை தாஜ் மஹாலைக் கட்டியவர்கள் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். யமுனா இல்லை என்றால் தாஜ் மஹாலும் இல்லை என்றார்.

'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி! - காணொளி இணைப்பு

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.

திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.


நடிகர் விஜய்காந்தின் தேமுதிக மக்களுடன் தான் கூட்டணி என்று உலக நியாயம் எல்லாம் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்தது.


மதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சியை தேர்தலுக்குத் தேர்தல் இடப் பங்கீட்டில் ஏமாற்றுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளன திமுகவும் அதிமுகவும்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை எப்போது யாருடன் எதற்காக கூட்டணி சேருவார்கள், எதற்காக விலகுவார்கள் என்பது அவர்களுக்கே சரியாகத் தெரியாது.


சின்னச் சின்னக் கட்சிகளைப் பொறுத்தவரை யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி சேர்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் அவர்களை கூட்டணியில் சேர்க்க திமுக, அதிமுக இடையே போட்டா போட்டி நிலவியது. ஆனால், இப்போது அந்தக் கட்சியை எவ்வளவு தூரத்தில் வைத்திருப்பது என்பது கடும் போட்டி நிலவுகிறது.


இது தான் தமிழகத்தில் இதுவரை நடந்து வந்த கதை.


ஆனால், 'உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக' என்பது மாதிரி இந்த முறை காங்கிரசை நடுத் தெருவில் விட்டுவிட்டது திமுக. வழக்கமாக திமுகவால் கைவிடப்படுவோர் அதிமுகவால் கைதூக்கி விடப்படுவதும், அதிமுகவால் கைவிடப்பட்டோர் திமுகவிடம் சரணடைவதும் வழக்கம்.


இந்த முறை அது நடக்கவில்லை. காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை. சரி, தேமுதிகவின் முதுகில் ஏறியாவது கங்காரு பயணம் போகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த சில முயற்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. இவர்களுக்காக தேர்தல் வேலை பார்த்துவிட்டு, அவர்களிடம் திமுகவும் அதிமுகவும் பட்ட அவமானங்களை மனதில் கொண்டு, காங்கிரஸை உடன் சேர்க்க மறுத்துவிட்டார் விஜய்காந்த்.


ஆக திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இன்னும் அதிமுகவுடன் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இது அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கா அல்லது 2014 மக்களவைத் தேர்தலுக்கா என்பது தெரியவில்லை. அவ்வளவு சாவகாசமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள் அதிமுகவிடம் பணிந்து போவதை கண்டு சகிக்காமல், தங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அப்படி ஏதும் இதுவரை சலசலப்புகள் இல்லை. அதிமுக தருவதை தா.பாண்டியன் வாங்கிக் கொள்வார் போலிருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால், இந்திய கம்யூனிஸ்டும் கடுமையான நிலையை எடுக்க வேண்டி வரலாம். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எடுப்பாரா என்பது தெரியவில்லை.


தேமுதிகவையும் அதிமுகவையும் சட்டமன்றத் தேர்தலில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர் இந்த முறையும் கூட்டணியைக் காக்க முயன்றதாகவும், ஆனால், அவரது யோசனையை அதிமுக தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது.


இதனால் அதிமுகவை விட அந்த அதிபுத்திசாலி மீது தான் அதிக கடுப்பில் இருக்கிறார் விஜய்காந்த் என்கிறார்கள்.


அதிமுகவை முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலிலேயே கையாண்டும் காட்டிவிட்டார் விஜய்காந்த். அதாவது, தங்களுடன் இடப் பங்கீடு பேச்சு நடத்த தேமுதிக போயஸ் தோட்டத்தில் வந்து வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிமுக நினைக்க, தேவைப்பட்டால் நீங்கள் தான் எங்களை அழைக்க வேண்டும் என்றரீதியில் பேச்சுவார்த்தைக்கே வரவில்லை தேமுதிக.


இது அதிமுகவுக்கு தேமுதிக தந்த முதல் ஷாக். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய பதவிகளுக்கெல்லாம் வரிசையாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், விஜய்காந்த் ஓடி வருவார் என்று நினைத்து ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டுக் கொண்டே போக, அது குறித்து ஒரு கருத்து கூட தெரிவிக்காமல் அமைத்து காத்து அடுத்த 'நோஸ்-கட்' தந்தார் விஜய்காந்த்.


இந் நிலையில் தேமுதிகவின் அமைதி அதிமுகவுக்கு கோபத்தைத் தர, அடுத்தடுத்த பட்டியல்களையும் அதிமுக வெளியிட, தடாலடியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் விஜய்காந்த்.


அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்றோ, தனித்துப் போட்டியிடுகிறோம் என்றோ ஒரு அறிக்கை விட விடவில்லை விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒன்னுமே நடக்காதது போல தடாலடியாக நடந்து கொள்வது வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அதே பாணியில் செயல்பட்டு அந்தக் கட்சிக்கே ஷாக் தந்துள்ளார் விஜய்காந்த்.


இப்படியாக இடதுசாரிகள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த முக்கியக் கட்சிகள் தவிர்த்து புதிய தமிழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை, பாஜக ஆகியவையும் உள்ளன. இதில் பாஜகவும் கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன. இதையும் கணக்கில் சேர்த்தால் '8 பிளஸ்' முனைப் போட்டி உருவாகியுள்ளது எனலாம்.


இடதுசாரிகளும் தனியே வந்தால் '9 பிளஸ்' முனைப் போட்டி உருவாகும்.


இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.


ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் கர்ணல் ரமேஷின் மனைவி வழக்கு

தனது கணவரைக் கொன்ற ராஜபக்சேவைக் கைதுசெய்து விசாரித்து தண்டனை வழங்கக் கோரி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியான கர்ணல் ரமேஷின் மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.அவரது சார்பில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வழக்கைப் பதிவு செய்தார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்து தங்கியுள்ள ராஜபக்சே, இந்த வழக்கைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இலங்கைத் தரப்பும் இந்த திடீர் வழக்கால் பீதியடைந்துள்ளது.

ரமேஷின் மனைவி அளித்துள்ள வழக்கில், இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சிப் படத்தில், ரமேஷ், இலங்கைப் படையினரால், அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை ஆகியவை சாட்சியங்களாக் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் அந்த நாட்டின் அதிபரான ராஜபக்சவே ரமேஷின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன கூடுதல் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளரான இந்த எல்மர்தான், அந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக இருமுறை கைதானவரும்கூட. வரி ஏய்ப்பை சர்வ தேச அளவில் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ஏராளமாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந்நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.

உண்மையில் வரி ஏய்ப்பை கடுமையாக ஒழிக்க போராடும் நாடு அமெரிக்காதான். சமீபத்தில் தங்கள் வங்கியில் கறுப்புப் பண கணக்கு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை சுவிஸ் வங்கி அமெரிக்க அரசுக்கு கொடுத்துவிட்டது.

வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் உண்மையான கிரிமினல்கள். அவர்களை இந்தியா போன்ற அரசுகள் நினைத்தால் கண்டுபிடித்து வரி ஏய்ப்பை ஒழிக்க முடியும்," என்றார்.

இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு பற்றி ஏராளமான தகவல்களை எல்மர் வெளியிட்டிருந்தாலும், அவர் வெளிப்படையாக அதுகுறித்துப் பேசுவது இதுவே முதல்முறை.

இப்போதைக்கு கறுப்புப் பண கணக்கு வைத்திருப்போர் பெயரை வெளியிட எல்மர் மறுத்தாலும், விரைவில் வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பல கறுப்புப் பண முதலைகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு... சீமான் உள்ளிட்ட 1000 பேர் வேலூரில் கைது!

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன் மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை வேலூர் கோட்டை பூங்காவிலிருந்து சீமானின் நடைப் பயணம் தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பேரணிக்கு திரண்டு வந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க, இயக்குநர் ஆர்கே செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

அனுமதி இல்லை

வேலூர் நகர எல்லையில் சீமானின் நடைப் பயணம் நெருங்கியபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசாரும் சீமான் தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற பேரணி இது என்பதை விளக்கிச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சில நிமிடங்கள் பேச்சு நடந்தது. ஆனாலும் போலீசார் பிடிவாதமாக இருந்தனர்.

சீமான் கைது

எனவே தடையை மீறி, நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் சீமான். இதனால் அவரை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றினர் போலீசார். அவருடன் வந்த 1000-க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.

முதல் கைது

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி நடத்திய பரபப்புரை நிகழ்வுக்காக சீமான் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

யாரை யாரிடமிருந்து பிரித்தாலும், எங்கு அனுப்பினாலும் நெஞ்சுரத்துடன் பணியாற்றுவோம்- கருணாநிதி

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதனின் தம்பி சிவாஜியின் மகன் சுதர்சன்-துர்கா தேவி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

சண்முகநாதன் என் பிள்ளைகளில் மூத்த பிள்ளை. என்னை வழி நடத்தி செல்பவர் அவர் என்றால் மிகை ஆகாது. அறிவு கூர்மையும், என் குடும்பத்தின் மீது அன்பும், தனிப்பட்ட முறையில் என் மீது பாசமும் கொண்டவர்.

தி.மு.க.வில் சொற்பொழிவாளனாக நான் சுற்றி திரிந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன். நான் பேசிய கூட்டங்களுக்கெல்லாம் வந்து குறிப்பு எடுப்பார். எதிர்க்கட்சியினரின் பேச்சை குறிப்பு எடுத்து அரசுக்கு அனுப்பும் போலீஸ் சி.ஐ.டி. அவர் என்பதை தென்னவன் மூலம் தெரிந்து கொண்டேன்.

1967-ல் நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது இவர் எப்படி குறிப்பு எடுத்து இருந்தார் என்பதை கோப்புகளை பார்த்து தெரிந்து கொண்டேன். என் பேச்சில் ஒரு வரி பிசகாமல் குறிப்பு எடுத்து இருந்தார். அவரது திறமையை பார்த்து எனது சுருக்கொழுத்தராக அவரை நியமிக்கும்படி அண்ணாவிடம் கேட்டேன். அவரும் சண்முகநாதனை எனது உதவியாளராக நியமித்தார். அன்று முதல் இன்று வரை எனது உதவியாளராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை காரணமாக நான் கைப்பட எழுதுவது இல்லை. கலைஞர் கடிதம், அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளை நான் வாய்மொழியாக சொல்ல சண்முகநாதன் எழுதி வெளியிடுகிறார். சண்முகநாதன் இல்லாவிட்டால் கருணாநிதி இல்லை என்று நான் சொல்வேன். இன்றளவும் என்னோடு இருந்து எனது பணிகளை ஆற்றி வருகிறார்.

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். இந்த விழாவில் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. நாடு போகும் போக்கை பார்த்தால் நமது கலை, கலாச்சாரம், நாகரீகத்துக்கு எதிர்காலம் உண்டா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ் வருடத்தை மாற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆண்டாண்டாக கொண்டாடியதை மாற்றலாமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்? தெருவில் போவோர்களா மாற்றினார்கள்? இன்றைக்கு நாங்களாக எதையும் மாற்றவில்லை.

1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் 500 தமிழ் புலவர்கள் செந்தமிழ் கற்றோர் கூடி பச்சையப்பன் கல்லூரியில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தை ஒன்று என்பதுதான். அதுதான் தமிழ் ஆண்டின் தொடக்க நாள்.

திருவள்ளுவர் பெயரால் ஆண்டு கணக்கை தொடங்க வேண்டும் என்று எண்ணத்தில் அது அறிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா? தமிழை உணராதவர்களா? மரபை அறியாதவர்களா? இதற்கு எல்லாம் நம்முடைய பதிலை செயல்மூலம் காட்ட வேண்டும்.

அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. சண்முகநாதனை போல வலிமை இருக்குமானால் அந்த நிலையை உருவாக்கிடலாம். நாகரீகம், கலை, காலாச்சாரம், பண்பாடு வாழ என்றென்றும் துணை நிற்போம் என்றார் அவர்.

யாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில்,

தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌ர், ஜெயல‌லிதாவு‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் பே‌ர் கடித‌ம்

பேர‌றிவாள‌ன், சா‌‌ந்த‌‌ன், முருக‌ன் ஆ‌‌கியோ‌ரின் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்‌ய‌க் கோ‌ரி சேல‌த்‌தி‌ல் ஒரு ல‌ட்ச‌ம் பே‌ர் ‌பிரதம‌ர், த‌மிழக முதலமை‌ச்ச‌ர், ஆளுந‌ர் ஆ‌கியோரு‌க்கு கடித‌ம் அனு‌ப்பு‌கி‌ன்றன‌ர். மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜி‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு சேல‌ம் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள பேர‌றிவாள‌ன், சா‌‌ந்த‌‌ன், முருக‌ன் ஆ‌‌கியோ‌ரு‌க்கு வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ப்பட உ‌ள்ளன. இ‌ந்த தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் இர‌யி‌ல் ம‌‌றிய‌ல், ம‌னித ச‌ங்‌கி‌லி, உ‌ண்ணா‌விரத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் போரா‌ட்ட‌ங்க‌ள் நடைபெ‌ற்று வரு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 3 பே‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, ஆளுந‌ர் ஆ‌கியோரு‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் கடித‌ம் அனு‌ப்பு‌ம் போரா‌ட்ட‌‌ம் சேலத்தில் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌கிறது. ஏராளமானோ‌ர் ஒரே நேர‌த்‌தி‌ல் கடித‌ம் எழுது‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ஒரே நேரத்தில் கடித‌ங்க‌ள் அனு‌ப்ப உ‌ள்ளன‌ர்.

மூ்ன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றக் கோரி டெல்லியில், தூக்குத் தண்டனைக்கான மாணவர் அமைப்பு சார்பில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு

இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

சிங்கள வீரர்களை மன்னித்தது தான் பிரபாகரன் செய்த ஒரே தவறு: சீமான்

சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் பிரபாகரன் செய்த ஒரே தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்றிரவு பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய சீமான் கூறியதாவது,

ஒவ்வொரு நொடியும் உயிர் நொடி தான். இந்திய, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையை தீவிரவாதிகள் தாக்கினர். உடனே பயந்துபோன இங்கிலாந்து அணி இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று கூறி நாடு திரும்பியது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தைரியமாக விளையாடலாம் என்றது மத்திய அரசு. அந்த மாநிலம் நம் தமிழகம் தான்.

போர்க்குற்றவாளியான ராஜபக்சே மீது விசாரணை நடத்தக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனால் தான் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவித்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது மத்திய அரசு.

2 ஆண்டுகளாக என் இன மக்கள் காப்பாற்றச் சொல்லி கதறிக் கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கப்போவதில்லை. எங்களிடம் தான் உயிர் பிச்சை கேட்பார்கள்.

சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் செய்த ஒரே தவறு ஆகும். மன்னிப்பது தான் மாண்பு. மரண தண்டனையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் என்றார்.

முருகன், சாந்தன், பேரறிவாளனை காக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முழக்கமிட்டார். பின்னர் தூக்கு தண்டனையை எதிர்த்து அவர் வெளிநடப்பு செய்தார்.

மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் திருமாவளவன்.

அவையின் மையப் பகுதிக்குச் சென்ற அவர் அட்டையை உயர்த்தி பிடித்து மூன்று பேரின் தூக்கு தண்டனையயும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார். பின்னர் அவர் வெளிநடப்பு செய்தார்.

வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையையே மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

சேலத்தில் ரயில் மறியல்:

இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் மனித சங்கிலி:

அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

முதல்வரை சந்திப்பேன், பேரறிவாளனை மீட்பேன்-தாய் அற்புதம்மாள்:

இந் நிலையில் பேரறிவாளனின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் என் மகனுக்கு தூக்கு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை தண்டனையில் இருந்து மீட்போம்’. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிடுவேன் என்றார்.

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று பேரறிவாளன் எழுதிய நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு-உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,

மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மத்திய அரசு இந்தக் கட்டத்தில் கூட இதைத் தடுத்து நிறுத்த முடியும். எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

முதல்வர் கையில் தான் உள்ளது-பேரறிவாளனின் தந்தை:

இந் நிலையில் இந்த மூவரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

குயில்தாசன் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது. எனது மகனை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு அவரை வேண்டுகிறேன் என்றார்.

மங்காத்தா... பின்வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!!

மங்காத்தா படம் குறித்த லேட்டஸ்ட் செய்தி இது... அந்தப் படத்தை வாங்கிய ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், இப்போது பின்வாங்கிவிட்டது!

அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பட விவகாரத்தில் நடக்கும் திடீர் மாறுதல்களுக்கு இணையாக திருப்பங்கள் அந்தப் படத்தில் கூட இருக்குமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தை மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்க ஆரம்பித்த போது, திமுக ஆளும் கட்சி. அதனால் செல்லப்பிள்ளை கணக்காக போஷாக்குடன் வளர்ந்தது படம். வெளியிடுவதிலும் சிக்கல் இருக்காது என்பதால் வாங்கிக் கொள்ள நிறைய விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.

ஆட்சி மாற்றம் நடந்ததும், எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இப்போது தயாநிதி அழகிரியை படத்தின் மைனஸாக பார்க்க ஆரம்பித்துவிட்டது அதே விநியோகஸ்தர் தரப்பு. தியேட்டர் தர உரிமையாளர்கள் தயங்கும் நிலை.

எனவே படத்தை கைமாற்றிவிட முடிவு செய்தார் தயாநிதி. பொதுவாக வேறு யார் படம் தயாரித்தாலும், அதை கடைசியில் தயாநிதி, உதயநிதி அல்லது சன் டிவிக்கு விற்றுவிட்டுப் போவதுதான் கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்தது. இப்போது முதல்முறையாக தயாநிதி அழகிரி அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தப் படத்தை இவர் வாங்கப் போகிறார், அவர் வாங்கப் போகிறார் என ஏகப்பட்ட யூகங்கள்.

கடைசியில் நடிகர் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அவர் பின் வாங்கிவிட்டார் மங்காத்தாவிலிருந்து. இதற்கு பின்னணியாக பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான காரணம் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன்டிவிக்கு விற்கப்பட்டதுதான் என்கிறது விவரமறிந்த தரப்பு. ஆனால் இதுகுறித்து விரிவாக பேச மறுத்துவிட்ட ஞானவேல் ராஜா, மங்காத்தா படத்தை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வளவுதான் என்றார்.

தயாநிதி அழகிரி இதுபற்றி தனது ட்விட்டரில், "மங்காத்தா ஸ்டுடியோ கிரீன் பேனரில் வெளியாகாது. ஆனால் நிச்சயம் ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகிவிடும்," என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.

ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அன்னா தரப்புடன் பேச மத்தியஸ்தராக பிரணாப் நியமனம்


லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாகவும், அன்னா குழு உருவாக்கிய ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கத் தயாராக இருப்பதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்ததையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அன்னா ஹசாரே தரப்புடன் பேச்சு நடத்தவுள்ளார்.

பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்த 3 பேர் குழுவை அன்னா ஹசாரே நியமிக்கவுள்ளார். இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தையை துவக்கவுள்ளனர்.

அன்னா தொடர்ந்து இன்று 8ம் நாளாக ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பிரதமர் அல்லது ராகுல் காந்தியுடன் மட்டும் தான் லோக்பால் மசோதா குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று அன்னா ஹஸாரே நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பிரித்விராஜ் சவானை பிரதமர் மத்தியஸ்தராக நியமித்தால் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைவோம் என்று அன்னா இன்று காலை தெரிவித்தார். பேச்சுவார்த்தையை உடனே துவங்க நாங்கள் திறந்த மனதுடன் தயாராக உள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார், அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் ஆகியோருடன் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக பிரணாப் முகர்ஜி ஆலோசனை நடத்தினார். (அன்னா ஹஸாரே, சரத் பவார், விலாஸ்ராவ் தேஷ்முக், பிரிதிவிராஜ் சவாண் ஆகியோர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

இக் கூட்டத்தையடுத்து ஹசாரே மற்றும் அவரது குழுவினருடன் பேச்சு நடத்த விலாஸ்ராவ் தேஷ்முக்கை மத்திய அரசு நியமித்தது.

அதே நேரத்தில் அன்னா தரப்பில் அரவிந்த் கெஜரிவாலுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தைகளை இன்று காலை ஆரம்பித்தார்.

அன்னாவின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று சல்மான் கேட்டுக் கொண்டார். அப்போது, பிரதமர் உறுதியளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடுவது குறித்து பரிசீலிப்போம் என்று கெஜரிவால் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து அன்னா ஹசாரேவுக்கு பிரதமர் ஒரு அவசர கடிதம் அனுப்பினார்.

அதில், நாம் எல்லோருமே ஊழலுக்கு எதிரான போரில் ஒருங்கிணைந்து செல்வோம். நானும் ஊழலுக்கு எதிரானவனே. லோக்பால் மசோதா விவகாரத்தில் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்ப்பதாக தனிப்பட்ட முறையில் உறுதியளிக்கிறேன்.

இதனால் உண்ணாவிரதத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். ஜன் லோக்பால் மசோதாவை உடனடியாக நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பத் தயாராக உள்ளேன்.

சபாநாயகர் அனுமதிக்கும்பட்சத்தில் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்பிக்கவும் தயாராக உள்ளேன் என்று பிரதமர் கூறியுள்ளார்.

இதையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் பேச்சு நடத்த பிரணாப் முகர்ஜியை நியமித்து பிரதமர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, அன்னாவின் சார்பில் 3 பேர் கொண்ட குழு பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தும் என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முன் அதை அனைத்துக் கட்சிகளும் கொண்ட நிலைக் குழுவுக்கு அனுப்பி, விவாதித்து, அனுமதி பெற்று பின்னர் சபாநாயகரின் அனுமதி கிடைத்த பின்னரே அதை சமர்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ஜன் லோக்பால் மசோதாவை இப்போது அரசு ஏற்றுக் கொண்டாலும் நாடாளுமன்ற சட்ட திட்டங்களின்படி அதை நிறைவேற்ற குறைந்தபட்சம் 1 மாத காலமாவது ஆகும்.

இதை அன்னா ஒப்புக் கொண்டால் அவரது உண்ணாவிரதம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர்- கனிமொழி

2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று திமுக எம்பி கனிமொழி சிபிஐ நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில், இன்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ராசா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் (minutes of the meeting) அவர் நீதிமன்றத்தில் சமர்பித்தார்.

இந்த விவகாரத்தில் எனக்குத் தெரியாமலேயே ராசா தன்னிச்சையாக முடிவெடுத்துவிட்டார் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறி வரும் நிலையில், கனிமொழி இன்று சமர்பித்த ஆதாரம், அவருக்கு எதிராக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வழக்கறிஞர் சுஷில் குமார் கூறுகையில், கனிமொழியால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அவரை கைது செய்துள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று நாடாளுமன்றத்திலேயே பிரதமரும் சிதம்பரமும் கூறியுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் விற்பனை விஷயத்தில் பிரதமரும், நிதியமைச்சராக இருந்த சிதம்பரமும் சேர்ந்து தான் ராசாவுடன் முடிவெடுத்துள்ளனர். இதனால், நாட்டுக்கு இழப்பு என்ற புகாரே தவறானது என்பது உறுதியாகிறது.

எப்போது நாட்டுக்கு இழப்பு என்ற வாதம் தனது பலத்தை இழக்கிறதோ.. அப்போதே கனிமொழி மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டும் பலம் இழக்கிறது.

அதே போல இந்த விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தணிக்கை அதிகாரி யூகத்தின் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்னும் ஏற்கவில்லை. இதனால் அந்த அறிக்கையை ஒரு சாட்சியாக இந்த நீதிமன்றம் ஏற்க முடியாது என்றார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் லாபம் அடைந்ததாக் கூறப்படும் ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகியவற்றின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களான எடிசலாட் மற்றும் யூனிநார் ஆகியவற்றுக்கு விற்பனை செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனாலும் அவர்கள் தங்களது உரிமங்களை விற்பனை செய்யவில்லை. எனவே அதில் இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றார்.

மங்காத்தாவை வாங்கிய சூர்யா உறவினர் ஞானவேல் ராஜா!

அஜீத் குமாரின் 50 வது படமான மங்காத்தாவை வாங்கியுள்ளார் நடிகர் சூர்யாவின் உறவினரும் பிரபல தயாரிப்பாளருமான ஞானவேல் ராஜா.

மங்காத்தாவின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி. இவரது க்ளவுட் நைன் மூவீஸ்தான் மங்காத்தாவைத் தயாரித்தது, சோனியுடன் இணைந்து ஆடியோவையும் வெளியிட்டது.

ஆனால் தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல், ஆட்சி மாற்றங்கள் காரணமாக இப்போது தயாநிதி அழகிரி மங்காத்தாவின் தயாரிப்பாளராக தொடர முடியாத நிலை. அவரது பேனரில் படம் வெளியானால் பாதுகாப்பு இருக்குமா என விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் தயங்கவே, படத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இன்னொரு பக்கம் ரசிகர்களின் அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு படத்தின் ரிலீஸை தள்ளிப் போட முடியாத அளவுக்கு இருந்தது.

இந்த நெருக்கடியைத் தீர்க்கும் வகையில், மங்காத்தா படத்தை வாங்கி ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் பேனரில் வெளியிடுகிறார் கே இ ஞானவேல் ராஜா. பருத்தி வீரன், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் இவர். நடிகர் சூர்யாவின் நெருங்கிய உறவினர்.

இதற்கிடையே, மங்காத்தா திரைப்படம் உலகெங்கும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாவதை உறுதி செய்துள்ளது, படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமை பெற்றுள்ள அய்ங்கரன் நிறுவனம்.

இந்த திடீர் மாறுதல்கள் அஜீத் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.

ராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள்?!: சீமான் கேள்வி!

நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் பேசுகையில், பேரறிவாளனை சிறைச்சாலை ஒரு மனிதனாக மாற்றியிருக்கிறது. அதேசமயம் சிறை பேரறிவாளனை சீர்த்திருத்தவில்லை. சிறையை பேரறிவாளன் சீர்த்திருத்தியிருக்கிறார். வேலூர் சிறை ஒரு கல்லூரியாக மாறியிருப்பதற்கு பேரறிவாளன் தான் காரணம். கருணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு இதில் தலையிட்டு மூவரையும் மீட்க முயற்சிக்க வேண்டும்.

இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, காவல்துறை ஆணையரிடம் போய், என்னைக் கைது செய்ய வேண்டும். எங்கள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்திருக்கிறார். சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. அந்தக் கட்சியினர் பேசாமல் விலகி எங்கள் கட்சிக்கு வந்துவிடலாம்.

நீங்கள் (யுவராஜா) எங்களை எதிர்த்து போராட வேண்டாம். நீங்கள் உங்கள் கட்சி தலைவர்களிடம் கேளுங்கள். அமரர் ராஜீவ்காந்தி அவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது, தன் தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய தலைவியாக இருந்த அம்மையார் இந்திரா காந்தியின் சிலை. காங்கிரஸ் கட்சியின் தலைவியின் சிலை. அய்யா ராஜீவ்காந்தி அவர்களுடைய தாயார் சிலைக்கு மாலை அணிவிக்க செல்கிறார்கள்.

திரளாக திரண்டு இருக்கிற என் தமிழ் உறவுகள் சாதாரணமான சீமான் நான் என்னுடைய வாகனத்தில் இருந்து இறங்கி இந்த மேடைக்கு வரும்போது கூட என்னை சுற்றி நூற்றுக்கணக்கான தம்பிகள் என்னை பாதுகாப்பாக பத்திரமாக அழைத்து வருவதை நீங்கள் பார்த்தீர்கள்.

பெருமைக்குரிய பெருமகள், இந்த நாட்டின் மிகப்பெரிய தலைவர் அம்மையார் இந்திரா காந்தி அதுவும் உங்கள் கட்சியின் தலைவி சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு அந்த தலைவர் வரும்போது, அவரைவிட்டு எங்கே போனீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். அதற்கு பின்னர் சொல்லுங்கள் பேரறிவாளன் உள்பட மூன்று பேரை தூக்கில் போட வேண்டும் என்று.

அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே...:

எங்கே போனார் அய்யா மூப்பனார். என் தம்பிகள் தூக்கு தண்டனையை வரவேற்கிறேன் என்று சொன்ன தங்கபாலு எங்கே போனார். ப.சிதம்பரம் போனது எங்கே. ஜெயந்தி நடராஜன் போனது எங்கே. அய்யா ஈவிகேஎஸ் இளங்கோவன் எங்கே போய் நின்று கொண்டிருந்தார். அன்றைக்கு டாஸ்மாக் கூட இல்லையே, எங்கே போனீங்க நீங்க?

யுவராஜ் அவர்களே தன் தலைவனுக்கு அருகே வராமல் தனித்து சாகவிட்ட துரோகத்திற்காக உங்கள் தலைவர்களை முதலில் தூக்கிலிடு. பிறகு என் தம்பிகளை தூக்கிலிட சொல்லுங்கள். ராஜீவ் காந்தி மீது பற்றுக்கொண்டவர் என்று சொல்லுகிறீர்கள். காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லுகிறேன், இந்திரா காந்தி செத்ததுக்கு மூன்று நாள் என் வீட்டில் சோறு ஆக்கவில்லை. படிக்கிற காலத்தில் அழுது கிடந்தேன். என் தாய் போல நேசித்து வாழ்ந்தேன். உங்களுக்கு இந்திரா காந்தி யார் என்று தெரியுமா?.

என்னை கைது செய்யச்சொல்லி மனு கொடுக்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் 50 ஆண்டுகளாக ஆண்ட நீங்கள், சோனியா காந்திக்கு இந்த நாட்டில் வைத்தியம் பார்க்க கூட வசதியில்லாத நிலையில் இந்த நாட்டை வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் பணம் இருக்கு. அமெரிக்காவில் போய் வைத்தியம் பார்க்கிறீர்கள். என்னிடம் பணம் இல்லை. என்ன செய்வது. நேராக சுடுகாட்டில் போய் படுத்துவிடுவதா?.

யுவராஜ் அவர்களே, நீங்கள் சரியான ஆளாக இருந்தால், இதேபோல் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள். இந்த இடத்தில் நான் தீக்குளிக்கிறேன். மறுபடி உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 500 ஓட்டு வாங்கி காட்டுங்கள். இல்லையேல் அனைத்து கட்சிகளுடன் நீங்கள் கூட்டணி வைத்து, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி. யுவராஜ் அவர்களே உங்களுக்கு ராகுல்காந்தி மட்டும்தான் தெரியும். மோதிலால் நேரு, ஜவகர்லால் நேரு என எனக்கு எல்லாம் தெரியும் என்றார் சீமான்.

பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 பேர் ஊர்வலம்; சத்யராஜ் தொடங்கி வைத்தார்!

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனைக்காக காத்திருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி சென்னையிலிருந்து வேலூர் வரை 500 இருசக்கர வாகனங்களில் 1000 பேர் ஊர்வலம் சென்றனர்.

இதனை நடிகர் சத்யராஜ், இயக்குநர் மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னையில் இருந்து வேலூர் செல்லும் வழி நெடுக பல கிராமங்களில் பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டனர். மக்கள் இதற்கு பெரும் ஆதரவை அளித்தனர்.

இதுவரை இப்படி ஒரு பெரு முழக்கக் கூட்டத்தை வேலூர் சிறைச்சாலை காவலர்கள் பார்த்ததில்லை எனும் அளவுக்கு உணர்ச்சிப்பூர்வமான ஊர்வலம் இது.

சிறைச்சாலை வந்தடைந்ததும் ஓங்கி முழக்கமிட தொடங்கிய தமிழுணர்வாளர் படையை கண்டவுடன் ஒரு கணம் அதிர்ச்சியுற்றனர் சிறைக் காவலர்கள்.

தாரை தப்பட்டைகளை முழக்கி பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி மீண்டும் மீண்டும் முழக்கங்களை எழுப்பினர்.

பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்க கோரி மனித சங்கிலி- வைகோ

ராஜீவ் கொலையில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என வைகோ கூறியுள்ளார்.

இது தொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்திலும், உலகெங்கும் உள்ள தமிழர்கள், உள்ளம் வேதனைத் தீயால் வெந்து கொண்டு இருக்கின்ற நிலையில், பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று இளம் தமிழர்களுடைய உயிர்களை காக்க வேண்டும். அறிவிக்கப்பட்டு உள்ள மரண தண்டனையைத் தடுக்க வேண்டும்.

மூன்று தமிழர் உயிர் காக்கும் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் அறிவித்து உள்ளவாறு, 22-ம் தேதி திங்கள் கிழமை மாலை, தலைநகர் சென்னையில் எம்.ஜி.ஆர்.நகரில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அனைத்து அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகள், தமிழ் உணர்வாளர்களின் அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்கள், இக்கூட்டத்தில் பங்கு ஏற்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் நடைபெறுகின்ற இந்த முக்கியமான கூட்டத்தில், நானும் பங்கு ஏற்கிறேன். கழக தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன். வருகின்ற 26-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட தலைநகரங்களில் மனித சங்கிலி இணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், வணிக பெருமக்கள், சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் மூன்று உயிர் காக்கும் மனித நேயத்தோடு பங்கு ஏற்க இருகரம் கூப்பி வேண்டுகிறேன். குறிப்பாக, தாய்மார்கள் பெருமளவில் பங்கு ஏற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More