மலர்ந்த மொட்டுக்களை
சுட்டு பொசுக்கிய பெருந்தீ
பசி தீராமல்
பற்றி எரிகிறது
பள்ளிகள் எங்கும்...
இன்னும் அடங்காத
கதறல் ஒலிகள்
காற்றுவெளியெங்கும்
கேள்விகளை விதைக்கின்றன...
மதுவிற்பனையையும்
கேபிள் டிவியையும்
அரசுடமையாக்கி கொண்டாடும்
உங்கள் அரசுகள்
குழந்தைகளை
எப்போது கொண்டாடும்?
எங்கள் சமாதிக்கு
அஞ்சலி செலுத்திய
ஆட்சியாளர்கள்
நினைவில் கொள்ளட்டும்.
நாங்கள் இன்னும்
மரணிக்கவில்லை
வகுப்பறைகளின் அமைதிக்கிடையே
தலைகுனிந்து கேளுங்கள்
இன்றும்
துடித்துக்கொண்டிருக்கின்றன
எங்கள் இதயங்கள்
நாங்கள் மரணிக்கவில்லை...
கண்ணீருடன்
குழந்தைகளே!!!




