Showing posts with label tamil politics. Show all posts
Showing posts with label tamil politics. Show all posts

வைகோ தமிழ அரசியல் வரலாற்றில் ஒப்பில்லாத தலைவன்!


கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால அரசியல் பொது வாழ்க்கையில் மூன்று முறை மாநிங்கலவை உறுப்பினர் பதவி வகித்தவர் , இரண்டாண்டுகள் மக்களவை உறுப்பினர் பதவி வகித்தவர் . இதுவரை இவர் தொட்டுப்பேசாத, போராடாத மக்கள் பிரச்சனைகளே இல்லை எனலாம் . இத்தனை வருட பொதுவாழ்க்கையில் ஒருமுறை கூட ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகதவர் .

ஆட்சியில் இருந்தால் நரம்பு புடைக்க திராணி பற்றி பேசுகிற தலைவர்கள் , ஆட்சியில் இல்லாத போது மலைவாசஸ்தலத்தில் ஓய்வில் இருப்பார்கள் . ஆட்சியில் இருந்தால் தன் பதவி தன் பிள்ளைகள் பதவி தன் பேரன்மார்களின் தொழில் வளர்ச்சி என்றிருக்கிறவர்கள் , ஆட்சியில் இல்லாத போது திராவிடம் ஆரியத்தின் அட்டகாசம் , தமிழினம் ஈழத்துயரம் என்றெல்லாம் நாடகம் ஆடுவார்கள் .


ஆளுங்ககட்சியின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் , எந்த அதிகாரத்திலும் இல்லாத போதும் , வருடக்கணக்கில் மக்கள் பிரச்சனைக்காக சிறையில் இருந்தாலும் எப்போதும் மக்களை அவர் தம் வாழ்க்கையை , நலனை பற்றியே சிந்திக்கிற தலைவன் வைகோ ஒருவர் தான் .

கடந்த சட்டமன்றதேர்தலில் நிதானமில்லாத ஒரு கட்சிக்காக காத்திருந்து கெஞ்சி கூத்தாடி கொண்டிருந்தார் ஒருவர் . இன்னொருவரோ , எப்படியும் காங்கிரசை தக்கவைக்க வேண்டி குட்டிகரணம் போட்டுகொண்டிருந்தார் இன்னொரு தலைவர் . எல்லோரும் கடந்த சட்டமன்றதேர்தலில் கூட்டணி பேசுவதில் மும்முரமாக இருந்த போது , வைகோ ஒருவன் தான் மன்மோஹனை சந்தித்து "புகிஷிமா போல இந்தியாவில் நிகழ்ந்தால் இந்தியா அதை எப்படி சமாளிக்க போகிறது . இந்தியமக்களின் பாதுகாப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும் " என்று மன்றாடினார் .


ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திடம் என்ன என்ன வாங்கினார்களோ , வாய் மூடி கிடந்தார்கள் தமிழின தலைவர்கள் . ஆனால் வைகோ ஒருவன் தான் சலசலப்பிற்கு அஞ்சாதவனாக தொடர்ந்து அந்த ஆலைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி போராடினார் . தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டிராத போதும் ஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து கண்ணீர் வடித்து அவர்களுக்காக சர்வதேச சமூகத்திடம் மன்றாடிகொண்டிருக்கிறார் .

முல்லைபெரியாறு பிரச்சனையில் கூட " உன் ஆட்சிகாலத்தில் தான் பிரச்சனை தீர்க்கப்படவில்லை , இல்லை இல்லை உன் ஆட்சியில் பிரச்சனை சிக்கலானது " என மாறி மாறி புள்ளிவிவரங்களோடு கீழ்த்தரமான அரசியல் செய்தார்கள் . ஆனால் வைகோ ஒருவன் தான் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக போராடினான் .

இப்படி போராடி போராடி போராடி , இன்னும் போராட முனைப்போடு இருக்கிற தலைவன் வைகோ ....


ஆனால் இந்த மக்களை பாருங்கள் ...தொடர்ந்து ஊழலை ஒரு பொது புத்தி ஆக்கியவனை அங்கீகரிக்கிறார்கள் . சினிமாவில் வசனம் எழுதியதை தவிர வேறொரு தொழிலும் செய்யாமல் முதல்வர் பதவியை தொழிலாக செய்தவர்களை அங்கீகரிக்கிறார்கள் . உங்கள் பிள்ளைகளுக்கு எப்படி கோடிகணக்கில் சொத்து வந்தது ?. உங்கள் மருமகன் உங்களோடு சுற்றிகொண்டிருந்தவராயிற்றே அவர் பிள்ளைகள் எப்படி இன்று இந்தியாவின் குறிப்பிடும்படியான தொழிலதிபர்களாக இருக்கிறார்கள் , உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு எப்படி கோடிக்கணக்கில் பணம் போட்டு படம் எடுக்க முடிகிறது ..? என்றெல்லாம் கேள்வி கேட்க மக்களுக்கு வாய் வருவதே இல்லை . ஓட்டுப்போடும் போதும் அதை எல்லாம் நினைவில் கொள்வதில்லை .

வந்த உடன் பேருந்து கட்டணத்தை ஏற்றியபோது கேவலமாக திட்டியவர்கள் , பால் விலையை கூட ஏற்றினால் என்ன செய்வது என்று அங்கலாய்த்தவர்கள் , நூலகத்தின் மீது கூடவா காழ்ப்புணர்ச்சி காட்ட வேண்டும் ? என்றெல்லாம் பொருமித்தள்ளியவர்கள் கூட இன்று சங்கரன்கோயிலில் ஓட்டுபோடும் போது அவர்களால் சீர்தூக்கி பார்க்க , நினைத்து பார்க்க முடியவில்லை .

தன் குடும்பத்தை அரசியலில் நுழைக்கத்தெரியாத, தனக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுத்து கட்டாயம் ஏற்றுகொள்ள வேண்டும் என்று வாஜ்பாய் வற்புறுத்திய போது கூட , அதை தன் கட்சி சகாக்களுக்கு விட்டுகொடுத்த, தன் கட்சி உறுப்பினர் மத்திய அமைச்சராக இருந்த போதும் தன் மனைவியை விட்டு நீராராடியாவோடு பேரம் பேச தெரியாத காரணத்தால் , தமிழ் நாட்டின் எல்லா திசைகளிலும் சொத்து வாங்கி குவிக்க தெரியாத காரணத்தால் , ஒழுக்க நெறியோடு ஒரே மனைவியோடு வாழ்கிற காரணத்தால் தான், மக்கள் வைகோவை தகுதியில்லாத அரசியல் தலைவர் என கருதுகிறார்களா ?


ஓய்வென்பதயே அறியாமல் புயலை போலவே சுற்றித்திரிகிற வைகோ , "அரசியலில் நேர்மை , பொதுவாழ்வில் தூய்மை , லட்சியத்தில் உறுதி " என்று தன் கட்சியின் கொள்கையாக அறிவித்ததோடு மட்டுமில்லாமல் அதன்படி செயல்பட்டுகொண்டிருக்கிற வைகோவை நீங்கள் ஆதரிக்க தயங்குகிரீர்கள் என்றால் நாம் வைகோவை ஏமாற்ற வில்லை , நாம் நம்மை நாமே ஏமாற்றிகொள்கிறோம் என்று பொருள் .


வைகோ நல்ல மனிதர் தான் , ஆனால் அவரால் நல்ல இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க தெரியவில்லை என்ற சிலரின் குற்றச்சாட்டு எனக்கு நகைப்பை தருகிறது .நீங்கள் யாரை இரண்டாம் கட்டத்தலைவர் என்று சொல்கிறீர்கள் ? தன் தலைவர் மூணு கிலோமீட்டர் தூரத்தில் வரும்போதே முதுகு வளைந்து தரையில் விழுந்து கும்பிடுபவர்கலையா ? தன் தலைவனை போலவே ஒன்று இரண்டு மூன்று என கூட்டிகொள்கிரவனையா ? ஊருக்கு ஒரு பொறியியல் கல்லூரி , வெளிமாநிலங்களில் முதலீடு , கடற்கரை மாளிகைகளை தன் தலைவனை போல சம்பாதித்து கொண்டவர்களை தான் நீங்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள் என்று சொன்னால் , நிச்சயம் வைகோவால் அப்படிப்பட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க முடியாது .



Thanks for Content: Udayakumar Facebook

தமிழகத்தில் அதிரடி! திமுக தலைவர்கள் அடுத்தடுத்து கைது!

முன்னால் துணை முதல்வர் தளபதி மு.க. ஸ்டாலின் கைது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டார்.

திமுக பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருத்துறைப் பூண்டி அருகே மொழிப்போர் தியாகி தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று இரவு தஞ்சாவூருக்கு வந்திருந்தார்.

பின்னர் இன்று காலை திருவாரூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். திருவாரூர் மாவட்ட எல்லையில், திருத்துறைப்பூண்டி அருகே கோவில்வன்னி என்னும் இடத்தில் அவருக்கு வரவேற்பு கொடுக்க திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட தி.மு.க.வினர் காத்திருந்தனர்.

அங்கே மு.க.ஸ்டாலின் வந்ததும், போலீஸார் அவரிடம் ஒரு விசாரணை உள்ளது என்று கூறினர். என்ன என்று கேட்டபோது, சமச்சீர் கல்வியை அமலாக்கக் கோரி திமுகவினர் போராட்டம் நடத்தியபோது பள்ளியில் இருந்து மாணவர்களை வலுக்கட்டாயமாக பஸ்ஸில் திரும்பி அனுப்பினர். அப்போது, கொரடச்சேரி அருகே பஸ் ஒன்று விபத்துக்கு உள்ளானதில், திமுகவினரால் திருப்பி அனுப்பப்பட்ட விஜய் என்ற மாணவர் விபத்தில் பலியானார்.

இதற்கு பூண்டி கலைவாணன்தான் காரணம். எனவே விசாரணை நடத்த வேண்டும் என்றனர்.

பூண்டி கலைவாணனை ஒப்படைக்க இயலாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டமும் நடந்தது. இதனால் ஸ்டாலினையும் சேர்த்து திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர்கள் அழகு திருநாவுக்கரசு, மதிவாணன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், விஜயன் எம்.பி. உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடைகள் அடைப்பு

ஸ்டாலின் கைதான சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது திமுகவினர் மத்தியில். திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திமுகவினர் தொடர்ந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் கைது

நீதிமன்ற நிபந்தனைப்படி சேலம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திடீரென மீண்டும் கைது செய்யப்பட்டார்.

கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

பேருந்துகள் உடைப்பு:

வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதற்கு, திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்துச் சென்ற போலீஸாருடன் மோதலிலும் ஈடுபட்டனர்.

அவரது கைதுக்கு எதிராக சேலம் நகரில் ஆங்காங்கே வன்முறைகள் நடந்து வருகின்றன. சேலம் பொதுமருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் எதிரில் பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்து போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சேலம் நகரில் காலை முதல் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதனையடுத்து நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ அன்பழகன் கைது

தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் இன்று அதிகாலை திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரும் நில மோசடி வழக்கிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலையில் தியாகராய நகரல் உள்ள அவரது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரை, திருப்பூரில் இருந்து 10 வேன்களில் வந்த நூற்றுக்கும் அதிகமான போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் அளித்துள்ள புகார் தொடர்பாக, ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அன்பழகன் திருப்பூர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

உடுமலைப்பேட்டையில் பல லட்சம் மதிப்புள்ள மில் ஒன்றை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக அவர் மீது புகார் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More