வைகோ, நெடுமாறன் தலைமையில் இன்று கேரளா செல்லும் சாலைகளில் முற்றுகை


கேரள அரசின் போக்கைக் கண்டித்து இன்று கேரளாவுக்குச் செல்லும் மலைப் பாதைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுகிறது.

ம.தி.மு.க. மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரள மாநிலத்திற்கு செல்லும் 13 மலைச்சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். கட்சி சார்பின்றி இந்த போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் லோயர்கேம்ப் பகுதியில் இன்று காலை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் கம்பம் கே.எம்.அப்பாஸ் ஆகியோரும், கம்பம் மெட்டுவில் மல்லை சத்யா, துரை.பாலகிருஷ்ணன், பெரியார் தாசன், நாகை திருவள்ளுவன், போடி மெட்டுவில் பி.வி. கதிரவன் எம்.எல்.ஏ., முருகன்ஜி ஆகியோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தேனி நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

நண்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்


இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பொங்கல் அன்று வெளிவர இருக்கும் நண்பன் திரைப்பட இசை வெளியீட்டு விழா அழைப்பிதழ்

Source: Youtube Online Tamil Movies

நரித் தந்திரம்! - சிறுகதை

ஒரு காடு. அங்கே ஒரு சிங்கம். அந்தச் சிங்கம் ஒரு கூட்டம் போட்டுது. எல்லா மிருகமும் வந்தாச்சு.

முதல்லே ஒரு குரங்கைக் கூப்பிட்டுது.

‘’இப்படிக் கிட்டே வா…என் உடம்பை முகர்ந்து பார்…எப்படி இருக்கு?’’ன்னு கேட்டுது.

குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு …’’வாசனை நல்லா இல்லீங்க… கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு!’’ன்னுது.

சிங்கத்துக்கு கோபம் வந்துட்டது. ‘’என் உடம்பைப் பத்தியா அப்படிச் சொல்றே’’ன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு சுருட்டிக்கிட்டு விழுந்துட்டது.

அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டது…. ‘’நீ வா…வந்து பார்த்துட்டு சொல்லு’’ ன்னது. கரடி….அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது.

சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து…’’ஆகா …ரோஜாப்பூ வாசனை!’’ ன்னு பொய்யா சொல்றே?ன்னு ஓங்கி ஒரு அறை. அதுவும் சுருட்டிக்கிட்டு விழுந்தது.

அடுத்த படியா ஒரு நரியைக் கூப்பிட்டது. ‘’நீ வந்து சொல்லு…நீதான் சரியாச் சொல்லுவே!’’ நரி…குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்துது. சிங்கத்தை முகர்ந்து பார்த்த்து. அப்புறம் சொல்லிச்சு; ‘’மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்!’’


இதுதான் நரித் தந்திரம்ங்கிறது.
இன்றைய மனிதர்களுக்கு இந்த தந்திரம் அதிகமாத் தேவைப்படுது.
…..அடிக்கடி தேவைப்படுது…

அரசு இலவச திட்டத்தில் வழங்கிய 65 ஆடுகள் மர்ம சாவு

குன்னூரில் அரசு இலவச திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 65 ஆடுகள் மர்மமான முறையில் பலியான குறித்து விசாரனை நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அடுத்த வண்டிசோலை கிராமத்தில் விவசாயிகளுக்கு, அரசு இலவச திட்டம் மூலம் ஆடுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 65 ஆடுகள் திடீரென மர்மமான முறையில் பலியாகின.

இதுகுறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள், கால்நடை துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த ஆடுகள் வைரஸ் நோய் தாக்கி பலியானதா, காலநிலை மாற்றத்தால் பலியானதா அல்லது கொடுக்கும்போதே நோய் பாதிக்கப்பட்டிருந்ததா என்பது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே அரசு வழங்கும் இலவச ஆடு மாடுகள் நோய் பாதிக்கப்பட்டவை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், 65 இலவச ஆடுகள் ஒரே நேரத்தில் இறந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தை சீர்செய்யக்கோரி அமெரிக்காவில் போராட்டம்.-வேகமாகப் பரவுகிறது!

அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.

இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.

4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.

5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.

6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.

7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.

8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.

10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.

11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.

13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

பரவி வரும் போராட்டம்

நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.

அதிபர் ஒபாமா கருத்து

போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.

பரவி வரும் போராட்டம்

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.

தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.

அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.

நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

அக் 9-ம் தேதி ரஜினியைச் சந்திக்கிறார் ஷாரூக்கான்!

வரும் அக்டோபர் 9-ம் தேதி, அதாவது ஞாயிற்றுக்கிழமை போயஸ் கார்டனில் ரஜினியைச் சந்திக்கிறார் நடிகர் ஷாரூக்கான்.

அன்று ஷாரூக்கானின் ஐபிஎல் அணி சென்னையில் விளையாடுகிறது. எனவே நிச்சயம் அன்றைக்கு தான் சென்னையில் இருப்பேன் என்றும், ரஜினியைச் சந்திப்பேன் என்றும் ஷாரூக்கான் கூறியுள்ளார்.

ஆனால் அவரது சந்திப்பு குறித்து ரஜினி வீட்டில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு நிருபர்களிடம் பேசிய ஷாரூக்கான், "நான் ரஜினியின் தீவிர ரசிகன். நிச்சயம் அவரை சென்னையில் சந்தித்து மரியாதை செலுத்த விரும்புகிறேன். அடுத்த முறை சென்னை செல்லும்போது நிச்சயம் சந்திப்பேன். அவரைப் பற்றி பேசும்போதே சிலிர்ப்பாக உள்ளது.

அக்டோபர் 4-ம் தேதி ராணா படத்தில் அவர் நடிப்பார் என்றும் அப்போது ராஒன் காட்சியை எடுத்துக் கொள்ளலாம் என்றும் சௌந்தர்யா கூறியிருந்தார். ஆனால் ரஜினி சார் ராணாவில் நடிக்கவில்லை. ஆனாலும் சௌந்தர்யா தன் வாக்கை காப்பாற்றினார்.

படப்பிடிக்கு தனது தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவுடன் வந்தார் ரஜினி சார். என் வாழ்க்கையில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆம், ரஜினி சாருடன் நான் நடித்தேன். பின்னர் அந்தக் காட்சியை சௌந்தர்யா எடிட் செய்து, மீண்டும் ரஜினி சாருக்கு காட்டி அனுமதி பெற்றார்," எனும் ஷாரூக், எந்திரன் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"ரோபோ படத்தை எனது குழந்தைகள் வீட்டில் உள்ள திரையரங்கில் பார்க்க விரும்பினார்கள். ஆனால் பிரிண்ட் கிடைக்கவில்லை. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட லதா மேடம், உடனே கவுரியிடம் (ஷாரூக் மனைவி) பேசினார். மும்பையில் உள்ள விநியோகஸ்தரிடம் பிரிண்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொன்னார். என் குழந்தைகள் ரோபோவை பார்த்து மகிழ்ந்தனர். இப்படி பல விஷயங்களில் ரஜினி சார் குடும்பத்துக்கு நான் ஆயுள் முழுக்க கடன்பட்டிருக்கிறேன்," என்றார்.

பராமரிக்காவிட்டால் இன்னும் 5 ஆண்டுகளில் தாஜ் மஹால் இடியும் அபாயம்-ஆய்வாளர்கள்

நாசம் அடைந்து கொண்டிருக்கும் அடித்தளத்தை சீர்செய்யவில்லை என்றால் இன்னும் 5 ஆண்டுகளில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் இடிந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலக அதிசயங்களில் ஒன்று காதல் சின்னமான தாஜ் மஹால். 358 ஆண்டுகளுக்கு முன்பு ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாகக் கட்டிய பளிங்கு மாளிகை தான் தாஜ் மஹால். உத்தர பிரதேச மாநிலத்தி்ல் உள்ள ஆக்ராவில் யமுனா நதிக்கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் அமைதியாகக் காட்சித் தரும் தாஜ் மஹாலைப் பார்க்க ஆண்டு ஒன்றுக்கு சுமார் 40 லட்சம் சுற்றுலாப் பயணிகள் ஆக்ரா வருகின்றனர்.

தாஜ் மஹால் அமைந்திருக்கும் யமுனா நதி, நிறுவனக் கழிவுகளால் மாசுபட்டுள்ளது. இதனால் தாஜ் மஹாலின் அடித்தளம் அரிக்கப்பட்டு வருகிறது. இப்படியே விட்டுவிட்டால் அடித்தளம் முழுவதுமாக அரிக்கப்பட்டு தாஜ் மஹால் விழுந்துவிடும்.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இன்னும் 2 முதல் 5 ஆண்டுகளில் தாஜ்மஹால் இடிந்துவிடும் என்று ஆக்ரா எம்.பி. ராம்சங்கர் கதேரியா டெய்லி மெயிலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கட்டிடக் கலையின் அதிசயமாகத் திகழும் தாஜ் மஹால் ஏற்கனவே பொலிவிழந்து வருகிறது. யமுனா நதியில் தண்ணீர் இல்லாததால் மரத்தால் ஆன அடித்தளம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக அதன் அடித்தளத்தைப் பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. அடித்தளம் நன்றாக இருக்கின்றது என்றால் எதை மறைக்கிறார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இது குறித்து பேராசிரியர் ராம் நாத் கூறுகையில், தாஜ் மஹால் யமுனா நதியின் கரையோரம் அமைந்துள்ளது. ஆனால் தற்போது யமுனா நதி வற்றிவிட்டது. இதை தாஜ் மஹாலைக் கட்டியவர்கள் எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்கள். யமுனா இல்லை என்றால் தாஜ் மஹாலும் இல்லை என்றார்.

வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி! - ஷாரூக் கண்ணீர்

யார் நமக்கு என்ன செய்தார்கள் என்பதையெல்லாம் மனதில் வைக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொள்வதில் ரஜினிக்கு நிகரில்லை.

திரையுலகில் தன்னை வசைபாடியவர்கள், கடுமையாக விமர்சித்தவர்கள் அத்தனை பேருக்கும், ஆபத்தான நேரத்தில் கைகொடுத்தவர் இதே ரஜினிதான். அந்தப் பட்டியல் பெரியது.

ரஜினி ரோபோ என்ற பெயரில் படம் நடிக்க ஆரம்பித்தபோது, ஷாரூக்கான் அந்த 'ரோபோ' என்ற உச்சரிப்பில் வரும் ஏழு தலைப்புகளை மும்பையில் தன் பெயரில் பதிவு செய்தார். ஷங்கர் இயக்கும் இந்தப் படம் எப்படி ரோபோ எனும் தலைப்பில் வெளிவரப்போகிறது பார்க்கலாம் என்ற நினைப்பில்.

ஆனால் படம் இந்தியில் அதே பெயரில் வெளியானது வேறு விஷயம்.

இன்று அதே ஷாரூக்கானுக்காக தனது உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல், வீட்டில் எழுந்த எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு (சௌந்தர்யா தவிர வேறு யாரும் ரஜினியின் இந்தப் பயணத்துக்கு ஒப்புக் கொள்ளவில்லையாம்!), மும்பைக்குப் பயணம் செய்து நடித்துக் கொடுத்து வந்திருக்கிறார் என்றால், அதை என்னவென்று சொல்வீர்கள்!

ரஜினியின் இந்த குணம், ஷாரூக்கானை ரொம்பவே ஆடிப் போக வைத்துவிட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டரில், "மிகுந்த குழப்பத்தில், புரிதலின்மையில், மன அழுத்தத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரஜினி சார் செட்டுக்குள் வந்தார். கடவுள் எதற்காக சினிமா படைத்தார் என்பதைப் புரிந்து கொண்டேன். ரஜினி எங்களை ஆசீர்வதித்தார். நாங்கள் முழுமை பெற்றோம். அவரது பெருந்தன்மை என் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிட்டது. அவருக்கும் குடும்பத்துக்கும் என் அன்பும் பிரார்த்தனைகளும்," என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த நாள், ரஜினி நடித்துக் கொடுத்த காட்சியை தனது எடிட் ஸ்டுடியோவில் போட்டுப் பார்த்து பிரமித்துப் போனாராம் ஷாரூக்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ""சௌந்தர்யாவுடன் அமர்ந்து எடிட் செய்த ரஜினி சாரின் காட்சிகளைப் பார்த்தேன். ரஜினியின் வானத்திலிருந்து வந்த தெய்வப் பிறவி போல தெரிகிறார். காட்சியைப் பார்த்த மொத்த அலுவலகமும் சந்தோஷத்தில் விம்மியது... வாவ்! (Sitting with soundarya & seeing the edit of rajini sir's shoot.he is like a celestial being...the whole office is beaming with happiness.WOW) என்று குறிப்பிட்டுள்ளார்.

ரஜினி உங்களுக்காக இவ்வளவு தூரம் வந்து நடித்துக் கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "உண்மையாக சொல்ல வேண்டும் என்றால்... எதிர்ப்பார்க்கவில்லை. காரணம், இப்படியெல்லாம் கூட மனிதர்கள் இருப்பார்கள் என்று என்னால் நம்ப முடியவில்லை. ரஜினி சார் என்னை அழவைத்துவிட்டார் என்றால் மிகையல்ல. உண்மையான ஜென்டில்மேன், மனிதாபிமானி. என் வாழ்க்கையில் நான் பார்த்தவர்களில் உன்னதமானவர் ரஜினி," என்றார்.

மாதுளையின் மகத்துவம் - Tamil Health Tips

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.

புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.

மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.

மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.

மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின் வெள்ளைப்பாடு நிவர்த்தியாகும். மாதுளம் பூக்களைத் தலையில் வைத்துக் கொண்டால் தலைவலி, வெப்பநோய் தீரும்.

'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி! - காணொளி இணைப்பு

தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக அனைத்து முக்கியக் கட்சிகளும் தனித் தனியே தேர்தலை சந்திக்கவுள்ளன. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.

திமுகவும் அதிமுகவுக்கும் மாறி மாறி காங்கிரஸ் கட்சியுடனும் பாமகவுடனும் கூட்டணி வைப்பது வாடிக்கை. காங்கிரசுக்கு வாடிக்கையே இன்னொரு கட்சியின் மீது ஏறி சவாரி செய்வது தான். பாமகவின் வாடிக்கை தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவது.


நடிகர் விஜய்காந்தின் தேமுதிக மக்களுடன் தான் கூட்டணி என்று உலக நியாயம் எல்லாம் பேசிவிட்டு கடைசியில் அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்தது.


மதிமுகவைப் பொறுத்தவரை அந்தக் கட்சியை தேர்தலுக்குத் தேர்தல் இடப் பங்கீட்டில் ஏமாற்றுவதையே ஒரு வேலையாக வைத்துள்ளன திமுகவும் அதிமுகவும்.


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை எப்போது யாருடன் எதற்காக கூட்டணி சேருவார்கள், எதற்காக விலகுவார்கள் என்பது அவர்களுக்கே சரியாகத் தெரியாது.


சின்னச் சின்னக் கட்சிகளைப் பொறுத்தவரை யார் அதிக சீட் தருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி சேர்வார்கள். பாஜகவைப் பொறுத்தவரை ஒரு காலத்தில் அவர்களை கூட்டணியில் சேர்க்க திமுக, அதிமுக இடையே போட்டா போட்டி நிலவியது. ஆனால், இப்போது அந்தக் கட்சியை எவ்வளவு தூரத்தில் வைத்திருப்பது என்பது கடும் போட்டி நிலவுகிறது.


இது தான் தமிழகத்தில் இதுவரை நடந்து வந்த கதை.


ஆனால், 'உலகத் தொலைக் காட்சிகளில் முதல் முறையாக' என்பது மாதிரி இந்த முறை காங்கிரசை நடுத் தெருவில் விட்டுவிட்டது திமுக. வழக்கமாக திமுகவால் கைவிடப்படுவோர் அதிமுகவால் கைதூக்கி விடப்படுவதும், அதிமுகவால் கைவிடப்பட்டோர் திமுகவிடம் சரணடைவதும் வழக்கம்.


இந்த முறை அது நடக்கவில்லை. காங்கிரசுக்கு உதவ யாரும் இல்லை. சரி, தேமுதிகவின் முதுகில் ஏறியாவது கங்காரு பயணம் போகலாம் என்று காங்கிரஸ் தலைவர்கள் எடுத்த சில முயற்சிகளும் படுதோல்வி அடைந்துவிட்டன. இவர்களுக்காக தேர்தல் வேலை பார்த்துவிட்டு, அவர்களிடம் திமுகவும் அதிமுகவும் பட்ட அவமானங்களை மனதில் கொண்டு, காங்கிரஸை உடன் சேர்க்க மறுத்துவிட்டார் விஜய்காந்த்.


ஆக திமுக, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித் தனியே களம் காண்கின்றன. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இன்னும் அதிமுகவுடன் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இது அடுத்த மாதம் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கா அல்லது 2014 மக்களவைத் தேர்தலுக்கா என்பது தெரியவில்லை. அவ்வளவு சாவகாசமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில மாவட்ட நிர்வாகிகள், மாநிலத் தலைவர்கள் அதிமுகவிடம் பணிந்து போவதை கண்டு சகிக்காமல், தங்கள் மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் அப்படி ஏதும் இதுவரை சலசலப்புகள் இல்லை. அதிமுக தருவதை தா.பாண்டியன் வாங்கிக் கொள்வார் போலிருக்கிறது. ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அதிமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால், இந்திய கம்யூனிஸ்டும் கடுமையான நிலையை எடுக்க வேண்டி வரலாம். கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் எடுப்பாரா என்பது தெரியவில்லை.


தேமுதிகவையும் அதிமுகவையும் சட்டமன்றத் தேர்தலில் பிளாஸ்திரி போட்டு ஒட்டிய அதிபுத்திசாலி பத்திரிக்கையாளர் இந்த முறையும் கூட்டணியைக் காக்க முயன்றதாகவும், ஆனால், அவரது யோசனையை அதிமுக தரப்பு நிராகரித்துவிட்டதாகவும் தெரிகிறது.


இதனால் அதிமுகவை விட அந்த அதிபுத்திசாலி மீது தான் அதிக கடுப்பில் இருக்கிறார் விஜய்காந்த் என்கிறார்கள்.


அதிமுகவை முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைலிலேயே கையாண்டும் காட்டிவிட்டார் விஜய்காந்த். அதாவது, தங்களுடன் இடப் பங்கீடு பேச்சு நடத்த தேமுதிக போயஸ் தோட்டத்தில் வந்து வரிசையில் நிற்க வேண்டும் என்று அதிமுக நினைக்க, தேவைப்பட்டால் நீங்கள் தான் எங்களை அழைக்க வேண்டும் என்றரீதியில் பேச்சுவார்த்தைக்கே வரவில்லை தேமுதிக.


இது அதிமுகவுக்கு தேமுதிக தந்த முதல் ஷாக். இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான முக்கிய பதவிகளுக்கெல்லாம் வரிசையாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டால், விஜய்காந்த் ஓடி வருவார் என்று நினைத்து ஜெயலலிதா பட்டியலை வெளியிட்டுக் கொண்டே போக, அது குறித்து ஒரு கருத்து கூட தெரிவிக்காமல் அமைத்து காத்து அடுத்த 'நோஸ்-கட்' தந்தார் விஜய்காந்த்.


இந் நிலையில் தேமுதிகவின் அமைதி அதிமுகவுக்கு கோபத்தைத் தர, அடுத்தடுத்த பட்டியல்களையும் அதிமுக வெளியிட, தடாலடியாக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டார் விஜய்காந்த்.


அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறோம் என்றோ, தனித்துப் போட்டியிடுகிறோம் என்றோ ஒரு அறிக்கை விட விடவில்லை விஜய்காந்த் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒன்னுமே நடக்காதது போல தடாலடியாக நடந்து கொள்வது வழக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டைல். ஆனால், அதே பாணியில் செயல்பட்டு அந்தக் கட்சிக்கே ஷாக் தந்துள்ளார் விஜய்காந்த்.


இப்படியாக இடதுசாரிகள் தவிர்த்து உள்ளாட்சித் தேர்தலில் 7 முனைப் போட்டி உருவாகியுள்ளது. இந்த முக்கியக் கட்சிகள் தவிர்த்து புதிய தமிழகம், கொங்குநாடு முன்னேற்றக் கழகம், கொங்கு இளைஞர் பேரவை, பாஜக ஆகியவையும் உள்ளன. இதில் பாஜகவும் கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் கூட்டணி அமைத்துள்ளன. இதையும் கணக்கில் சேர்த்தால் '8 பிளஸ்' முனைப் போட்டி உருவாகியுள்ளது எனலாம்.


இடதுசாரிகளும் தனியே வந்தால் '9 பிளஸ்' முனைப் போட்டி உருவாகும்.


இதன்மூலம் தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பின், கூட்டணி இல்லாத ஒரு தேர்தலாக உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதனால் ஒவ்வொரு கட்சியின் உண்மையான பலமும் வெளியே தெரியப் போகிறது.


ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் கர்ணல் ரமேஷின் மனைவி வழக்கு

தனது கணவரைக் கொன்ற ராஜபக்சேவைக் கைதுசெய்து விசாரித்து தண்டனை வழங்கக் கோரி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியான கர்ணல் ரமேஷின் மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.அவரது சார்பில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வழக்கைப் பதிவு செய்தார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்து தங்கியுள்ள ராஜபக்சே, இந்த வழக்கைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இலங்கைத் தரப்பும் இந்த திடீர் வழக்கால் பீதியடைந்துள்ளது.

ரமேஷின் மனைவி அளித்துள்ள வழக்கில், இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சிப் படத்தில், ரமேஷ், இலங்கைப் படையினரால், அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை ஆகியவை சாட்சியங்களாக் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் அந்த நாட்டின் அதிபரான ராஜபக்சவே ரமேஷின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன கூடுதல் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

சொந்த மகனைப் போல பாசம் காட்டிய ஜெயலலிதா! - அஜீத் உருக்கம்

சொந்த மகனைப் போல என்மீது பாசம் காட்டினார் முதல்வர் ஜெயலலிதா என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத் குமார்.

சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ஜெயலலிதாவுடனான தனது சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "அம்மா என் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தியதை எப்போதும் மறக்கவே மாட்டேன்.

அம்மாவின் போயஸ் கார்டன் வீட்டுக்கு நானும் ஷாலினியும் போயிருந்தோம். சொந்த மகனைப்போல அப்போ பாசம் காட்டினாங்க அம்மா!," என்று கூறியுள்ளார்

திரையுலக விழாவில் எதிர்த்துப் பேசியதற்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி அவரை மிரட்டியதாகக் கூறப்பட்டது குறித்த கேள்விக்கு, "ஜனநாயகப் பண்புகளை நம்புறவன் நான். அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எப்பவும் அதிகபட்ச மரியாதை கொடுப்பேன். என் மனசுல பட்டதை விழாவில் பேசினேன். அதுல எந்த உள்நோக்கமும் இல்லை. என் திருமணத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அய்யா நேரில் வந்து வாழ்த்தினார். அது எப்பவும் என் மனசில் நீங்காமல் இடம் பிடிச்சிருக்கும்!," என்று கூறியுள்ளார்.

என் சாவுக்கு கூடும் கூட்டம்....

மேலும் அவர் கூறுகையில், "எனக்கு இப்போ 40-வயசாகுது. இன்னும் 20-வருஷம் உயிரோட இருப்பேனானுகூடத் தெரியாது. ஒவ்வொரு மனுஷனும் எப்படி வாழ்ந்தான் என்கிற அடையாளம், அவன் சாவுக்குக் கூடுற கூட்டத்தில்தான் தெரியும்னு சொல்வாங்க. என் சாவுக்குக் கூடுற கூட்டம், அஜீத்குமார் யார்னு நிச்சயமா இந்த உலகத்துக்கு எடுத்துக்காட்டும்," என்று தெரிவித்துள்ளார்.

'தல' குனிய வச்சிட்டீங்களே! - வருத்தத்தில் அஜீத்

மங்காத்தா தண்ணி பார்ட்டியில் சோனாவை பலாத்காரம் செய்துவிட்டார்கள் என ஊரெங்கும் பேச்சாய் கிடப்பது, படத்தின் நாயகன் அஜீத்தை வருத்தப்பட வைத்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது மங்காத்தா மூலம் அஜீத்துக்கு.

ஆனால் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த இயக்குநர் வெங்கட் பிரபு, அவர் தம்பி பிரேம், படத்தில் நடித்த மகத், வைபவ் என எல்லோருமே மது விருந்து கொண்டாடிய லட்சணம், படத்தின் வெற்றிக்கே கரும்புள்ளி போலாகிவிட்டதே என பெரிதும் வருத்தப்படுகிறாராம் படத்தின் ஹீரோவான அஜீத்.

ஏற்கெனவே ஜோசியம், ஜாதகம் போன்றவற்றில் ஏக நம்பிக்கை கொண்டவர் அஜீத் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பார்ட்டியில் அஜீத்தும் கலந்து கொண்டார் என்றாலும், அவர் வந்த வேகத்தில் எல்லோருக்கும் ஒரு ஹாய் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டாராம்.

'தல' போனபிறகுதான், தண்ணியில் கவிழ்ந்து தலை கால் புரியாமல் சோனா பலாத்காரம் வரை போய்விட்டதாம் நிலைமை. அடுத்தநாள் சோனா போலீசில் புகார் கொடுத்த பிறகுதான் விவரம் தெரிய வந்ததாம் அஜீத்துக்கு. விளைவு, மதுவிருந்து வைத்தவர், அதில் அத்துமீறியவரின் நண்பர் என அனைவரையும் கூப்பிட்டு, 'என்னங்க இது... தல தலன்னு சொல்லி தல குனிய வச்சிட்டீங்களே... இனி இதை மங்காத்தா பார்ட்டின்னு வெளிய சொல்லாதீங்க," என்று சொன்னதாக கிசுகிசுக்கிறார்கள்.

'பெரிய நட்சத்திரங்களுக்கு வரும் வழக்கமான சங்கடங்களில் இதுவும் ஒன்று. ஆனா ரசிகர்களுக்கு 'தல'யைப் பத்தி தெரியும்... விடுங்க', என்கிறார்கள் அஜீத்துக்கு நெருக்கமானவர்கள்!

ராஜபக்சேவை தண்டிக்க, தமிழ் ஈழம் அமைக்கக் கோரி ஜெனீவாவில் தமிழர்கள் பேரணி

போர்க்குற்றம் புரிந்த ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி விசாரணை நடத்தித் தண்டிக்க வேண்டும். தமிழ் ஈழம் அமைக்க பொது ஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் முன்பு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடி பிரமாண்ட பேரணியும், ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

தமிழ் ஈழக் கொடி, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடைய படம், மூன்று தமிழர் உயிரைக் காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்த இளம் பெண் செங்கொடி ஆகியோரின் புகைப்படங்களைக் கையில் ஏந்தியபடி பல ஆயிரம் தமிழர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்து வந்து இவர்கள் இதில் கலந்து கொண்டனர். ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 18வது கூட்டம் நடைபெற்ற வேளையில் நடந்த இந்தப் பிரமாண்டப் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பிரான்ஸ்சைச் சேர்ந்த மேயரான ஸ்டீபன் கட்டிக்னான் கூறுகையில், எனது தொகுதியில் 30 ஆயிரம் தமிழர்கள் உள்ளனர். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதற்காகவே நான் இங்கு வந்தேன் என்றார். பேராசிரியர் ஜான் நீல்சன் என்பவர் கூறுகையில், இலங்கையில் நடந்த தமிழ் இனப்படுகொலை குறித்து மனித உரிமைக் கவுன்சில் விரிவாக விசாரிக்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும் என்றார்.

இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர் விராஜ் மெண்டிஸ். இவர் ஒரு சிங்களர் ஆவார். தமிழர்களின் மனித உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு தருபவர். நீண்ட காலமாக தமிழர்களின் போராட்டத்தோடு பங்கேற்றும் வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லண்டனைச் சேர்ந்த கந்தையா ராஜ மனோகரன் என்பவர் கூறுகையில்,

இலங்கை அரசின் போர்க்குற்றம் பற்றி சர்வதேச அளவிலான சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தினார். சுதந்திர தனித்தமிழ் ஈழ விடுதலைக்காக, தாங்கள் போராடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாத அளவில் பெரும் திரளான தமிழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக விமானம், ரயில், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களில் திரண்டு வந்திருந்தனர்.

நியூயார்க்கை விட்டு வெளியேற ராஜபக்சேவுக்கு அமெரிக்க அதிகாரிகள் திடீர் தடை!

ஐ.நா.: ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள ராஜபக்சேவை, ஐநா. கூட்டத்தைத் தவிர வேறு எங்கும் போக வேண்டாம். நியூயார்க்கை விட்டு வெளியேற வேண்டாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எங்கும் போக முடியாமல் நியூயார்க்கோடு முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

ராஜபக்சேவுக்கு இலங்கையை விட்டு எங்கும் சுதந்திரமாக இருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து சென்ற அவர் லண்டனில் மிகப் பெரிய தமிழர் எதிர்ப்பைச் சந்தித்தார்.மேலும் அவர் மீது கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இதனால் போன வேகத்தில் அவர் நாட்டுக்கு ஓடி வர வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் தற்போது ஐநா. கூட்டத்தில் பேசுவதற்காக வந்துள்ள ராஜபக்சேவை, நியூயார்க் நகரை விட்டு வெளியேற வேண்டாம் என அமெரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனராம். வெளியேறினால் போர்க்குற்ற வழக்கில் சிக்கிக் கைதாக நேரிடலாம் என்றும் அவருக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாம்.

ஐநா. கூட்டத்திற்கு வருவதற்கு மட்டும்தான் உரிய பாதுகாப்பு தர முடியும். மாறாக பிற இடங்களுக்குப் போவதாக இருந்தால் அந்தப் பாதுகாப்பு தர முடியாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதனால் நியூயார்க்கைத் தவிர வேறு எங்கும் போக முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ராஜபக்சே.

அதிக அளவில் மது அருந்தும் பழக்கம் உடையவர் ராஜபக்சே. இதனால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்புக்கும் அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள அவர் திட்டமிட்டிருந்தார்.

பொங்கல் ஸ்பெஷலாக வரும் 'நண்பன்'!

ஷங்கர் இயக்கும் படம் ஒன்று எந்த பரபரப்பும் இல்லாமல் இத்தனை அமைதியுடன், வேக வேகமாக படமாவது அநேகமாக நண்பனாகத்தான் இருக்கும்!

படம் ஆரம்பித்த போது, யார் ஹீரோ என்பதில் மட்டும் மகா குழப்பம் நிலவியது. விஜய்தான் ஹீரோ என்று முடிவான பிறகு, ஊட்டி, சென்னை என்று தமிழ்நாட்டுக்குள்ளேயே சுற்றிச் சுற்றிப் படமாக்கிய ஷங்கர், இதோ கிட்டத்தட்ட படத்தை முடித்தேவிட்டார்!

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், இலியானா என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள இந்தப் படம், தெலுங்கிலும் டப் செய்யப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

வரும் பொங்கலுக்கு இந்தப் படத்தை பிரமாண்டமாய் ரிலீஸ் செய்யும் வேலைகளை இப்போதிலிருந்தே துவங்கிவிட்டார் ஷங்கர்.

இனி, விழுந்தடித்துக் கொண்டு ஷங்கர், விஜய், ஜீவா மீடியாக்களுக்கு பேட்டிகள் தரப்போகிறார்கள்!

பேரறிவாளன், சாந்தன், முருகனின் உயிரை பறிகொடுக்க மாட்டோம்: வைகோ

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரின் உயிரை பறிகொடுக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தூக்கு தண்டனைக்கு எதிராகப் போராடும் தமிழக மக்களின் மனநிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் கருத்துரிமை களம் அமைப்பின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் அருகே மனித நேய மணல் சிற்பம் அமைக்கப்பட்டது.

மனித தலையில் போடப்பட்ட தூக்கு கயிறு அறுந்தது போன்றும், சிங்கத்தின் கையில் தூக்கு இருப்பது போன்றும் அந்த சிற்பம் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்த சிற்பத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய 3 பேரை தூக்கிலிட மத்திய அரசு தீவிரமாக உள்ளது. ஆனால் மாநில அரசோ தமிழக மக்களின் உணர்வுகளுககு மதிப்பு கொடுத்து அந்த 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த பிரமாண்ட மணல் சிற்பம் கடல் நீரிலும், காற்றிலும் அழிந்துவிடலாம். ஆனால் தமிழக மக்களின் மனதில் இருக்கும் உயிர் சிற்பத்தை எதனாலும் அழித்துவிட முடியாது. இலங்கையில் உடன்பிறப்புக்களை பறிகொடுத்தோம். ஆனால் இந்த 3 பேரின் உயிரை பறிகொடுக்க மாட்டோம். அவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். மரண தண்டனையை ரத்து செய்ய மாநில அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றார்

ஜெனிலியாவா-ஹன்சிகாவா? - வோலாயுதம் படப்பிடிப்பில் மோதல்!

விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'வேலாயுதம்' படத்தில் ஜெனிலியா - ஹன்ஸிகா என இரண்டு நாயகிகள் நடித்துள்ளனர். இந்த இருவருக்கும் யார் பெரிய நட்சத்திரம், யாருக்கு படத்தில் முக்கியத்துவம் என்ற மோதல் எழுந்தததாம்.

பின்னர் ஒருவழியாக இந்த மோதலைத் தீர்த்து வைத்தார்களாம்.

வேலாயுதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், படத்தின் விளம்பரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். படத்தின் சிறப்புகள் குறித்து இயக்குநர் ராஜா பேட்டியளித்து வருகிறார்.

படத்தின் இரு ஹீரோயின்களின் ஈகோ போட்டி குறித்து இயக்குநர் ராஜா கூறுகையில், "ஜெனிலியாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே யார் பெரியவர்? என்ற 'ஈகோ' மனப்பான்மை இருந்தது உண்மைதான். ஆனால், அதை இருவரும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார்கள். நேரில் பார்த்தால் சிரித்துக்கொள்வார்கள்.

உள்ளுக்குள் போட்டி மனப்பான்மையை வைத்துக்கொண்டு, வெளியில் சினேகிதிகள் போல் நடிப்பார்கள். பொதுவாக 2 கதாநாயகிகள் சேர்ந்து நடிக்கும்போது இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாவது இயல்புதான்.

ஜெனிலியா, ஹன்சிகா இருவரும் மும்பையை சேர்ந்தவர்கள் என்பதால், இருவருக்கும் இடையே போட்டி கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. ஆனால், பிரச்சினை எதுவும் இல்லை.

படத்தில் இரண்டு பேருக்குமே சமமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனால், படப்பிடிப்புக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக நடந்தது. உச்சக்கட்ட காட்சியை கேரள மாநிலம் கொச்சியில் 15 நாட்கள் நடத்தினோம்.

ரஜினிக்கு பாட்ஷா போல...

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு 'எங்க வீட்டு பிள்ளை' போல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு 'பாட்ஷா'வைப்போல், கமல்ஹாசனுக்கு 'தசாவதாரம்' போல், விஜய்க்கு `வேலாயுதம்' படம் அமையும்,'' என்றார் ராஜா.

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது ஏன்? - அஜீத்

சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.

எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.

சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.

மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.

இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்," என்றார் அஜீத்.

கறுப்புப் பண மீட்பில் இந்திய அரசு ஆர்வம் காட்டவில்லை!- ருடால்ப் எல்மர்

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை என்கிறார், இதுகுறித்த விவரங்களை அதிக அளவில் வெளியிட்டு வரும் ருடால்ப் எல்மர்.

சுவிஸ் வங்கியின் முன்னாள் பணியாளரான இந்த எல்மர்தான், அந்த வங்கியில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் பற்றிய முழு விவரங்களை விக்கிலீக்ஸுக்கு தந்தவர். இதற்காக இருமுறை கைதானவரும்கூட. வரி ஏய்ப்பை சர்வ தேச அளவில் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "சுவிஸ் வங்கி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் ஏராளமாக உள்ளது.

இந்தியாவின் முன்னணி நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் பெரும் வரி ஏய்ப்பு செய்து, கேமேன் ஐலேண்ட் போன்ற தீவுகளில் பணத்தைக் குவித்து வைத்துள்ளனர்.

இந்தியா பெரிய நாடு. எந்த உலக நாட்டிடமும் பேசி தகவலை வாங்கும் திறன் மிக்க நாடு. ஆனாலும் ஏனோ அந்நாட்டு அரசு எந்த ஆர்வமும் இதில் காட்டவில்லை.

உண்மையில் வரி ஏய்ப்பை கடுமையாக ஒழிக்க போராடும் நாடு அமெரிக்காதான். சமீபத்தில் தங்கள் வங்கியில் கறுப்புப் பண கணக்கு வைத்துள்ள அமெரிக்கர்களின் பட்டியலை சுவிஸ் வங்கி அமெரிக்க அரசுக்கு கொடுத்துவிட்டது.

வரி ஏய்ப்பு செய்பவர்கள்தான் உண்மையான கிரிமினல்கள். அவர்களை இந்தியா போன்ற அரசுகள் நினைத்தால் கண்டுபிடித்து வரி ஏய்ப்பை ஒழிக்க முடியும்," என்றார்.

இந்தியர்களின் கறுப்புப் பண கணக்கு பற்றி ஏராளமான தகவல்களை எல்மர் வெளியிட்டிருந்தாலும், அவர் வெளிப்படையாக அதுகுறித்துப் பேசுவது இதுவே முதல்முறை.

இப்போதைக்கு கறுப்புப் பண கணக்கு வைத்திருப்போர் பெயரை வெளியிட எல்மர் மறுத்தாலும், விரைவில் வெளியிடவிருப்பதாகக் கூறியுள்ளார். அவரது இந்தப் பேச்சு பல கறுப்புப் பண முதலைகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

சிலந்தி… சிலந்தி… - சிறுகதை Tamil Short Stories

ஸ்காட்லாந்தின் மன்னனாக பொறுப்பேற்றான் ராபர்ட் புரூஸ் என்ற மன்னன்.

இருப்பினும் கொஞ்சமும் மன நிம்மதி இல்லை. இங்கிலாந்து நாட்டிற்கும், ஸ்காட்லாந்திற்குமிடையே மன வேறுபாடு அதிகரித்தபடி இருந்தது. இங்கிலாந்தின் மேல் படையெடுத்தும், தோல்வியே கிடைத்தது.

புரூஸ், ஸ்காட்லாந்தில் நிச்சயமற்ற ஆட்சிப் பதவி வகித்து வரலானான். அவனுக்குப் போட்டியாக, “ஜான் பாலியால்’ என்பவன், தானும் மன்னன் ஆகவேண்டும் என்பதில் மும்முரமாக ஈடபடலானான்.

இந்த சிக்கலை இங்கிலாந்தின் மன்னன், “எட்வர்டு’ தீர்த்து வைப்பதன் மூலம், இருநாட்டுப் பகையும் முடிவுக்கு வரும் என்று எண்ணி, அங்கு சென்றனர்.

இவர்களுக்கு சரியானபடி முடிவு கூறாமல், எட்வர்டு கேவலப்படுத்தினான். “”பேதைகளே… இந்த நாடு எங்களுக்குச் சொந்தம். நீங்கள் என் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். மன்னனாக ஆகக் கூடாது, விடவும் மாட்டேன்,” என்று தன் மார்பைத் தட்டினான்.

புரூசுக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது. தன் நாட்டை இழிவாகச் சொன்னவனை விடக்கூடாது என்று எண்ணியபடி, மேலும் படையெடுத்தான். இங்கிலாந்து மன்னனோ தக்க பதிலடி கொடுத்தான். பலமுறை போர் நடந்தது. இறுதி வரை ஆங்கிலேயர் வெற்றி பெற்றதோடு அல்லாமல், ஸ்காட்லாந்தில் மன்னர்கள் அமர்ந்து பதவி ஏற்கும், “புனிதக்கல்லை’ பெயர்த்துச் சென்று லண்டன் நகரில் புதைத்தனர்.

ராபர்ட் புரூஸ் மிகுந்த துன்பத்துடன் மலைப்பகுதியில் உள்ள குகை ஒன்றை அடைந்தான். ஓரிடத்தில் ஓய்வெடுக்கலானான். ஒருபுறம் இருந்து தோன்றிய சூரிய ஒளியில், இவன் எதிரே சிலந்தி வலை ஒன்று தெரிந்தது. சிலந்தி வலையின் ஒரு இழையில், சிலந்தி ஒதுங்கிக் கொண்டு இருந்தது. அச்சிலந்தியானது அந்த இழையை எதிரே உள்ள குகையின் சுவற்றுடன் இணைத்துவிட முயற்சி செய்து கொண்டிருந்தது.

லேசான காற்று இழையில் தொங்கிய சிலந்தி, ஊசலைப் போல் ஆடலாயிற்று. ஒரு முறையல்ல, இரு முறையல்ல… சிலந்தி பலமுறை முயன்றது. சிறிதும் சோர்ந்து போகவில்லை.

புரூஸ், சிலந்தியை உன்னிப்பாகக் கவனித்தான். கடைசியாக சிலந்தி தன் இழையை மறுமுனையுடன் இணைத்தது. சிறிது நேரம் நின்றுவிட்டு வலையைப் பின்ன ஆரம்பித்தது.

நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த புரூஸ், அதையே தன் லட்சியமாகக் கொண்டு, துள்ளி எழுந்தான். தன் வீரர்களைத் திரட்டினான். 30 ஆயிரம் பேர் இருக்கின்றனர். எதிரி நாட்டிலோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருக்கின்றனர். இம்முறை வெல்ல வேண்டும் என்று உறுதியுடன் அஞ்சா நெஞ்சுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்த்து, பெரு வெற்றி பெற்றான். ஆங்கிலேயரது படைவீரர்கள் சிதறி ஓடினர்.

ராபர்ட் புரூஸ், சிலந்தியை வழிகாட்டியாகக் கொண்டே எதிரியை விரட்டியடித்து, வரலாற்றில் முதல் இடத்தைப் பெற்றான். அவனது புகழுக்கு சிலந்தியே காரணம்.

நடை பயணத்துக்கு அனுமதி மறுப்பு... சீமான் உள்ளிட்ட 1000 பேர் வேலூரில் கைது!

மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி வேலூரில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்ட நடைப் பயணத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.

தடையை மீறி நடைப்பயணத்தைத் தொடர்ந்த சீமான், இயக்குநர் செல்வமணி, பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு கருணை காட்டி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும் தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் தானே முன் மொழிந்து, அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் பெற்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அந்த மூன்று பேரின் குடும்பத்தினரின் வாழ்வில் மீண்டும் விளக்கேற்றி வைத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தும், இவர்கள் மூன்று பேரின் மரண தண்டனையை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் வேலூர் முதல் சென்னை வரை சீமான் தலைமையில் பரப்புரை நடைபயணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை வேலூர் கோட்டை பூங்காவிலிருந்து சீமானின் நடைப் பயணம் தொடங்கியது. அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த பேரணிக்கு திரண்டு வந்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகிக்க, இயக்குநர் ஆர்கே செல்வமணி, ஷாகுல் அமீது உள்ளிட்ட நிர்வாகிகள் இந்தப் பேரணியில் பங்கேற்றனர்.

அனுமதி இல்லை

வேலூர் நகர எல்லையில் சீமானின் நடைப் பயணம் நெருங்கியபோது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடைப் பயணத்துக்கு அனுமதி கிடையாது என்றும், மீறி பயணத்தைத் தொடர்ந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் போலீசார் எச்சரித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசாரும் சீமான் தரப்பும் பேச்சுவார்த்தையில் இறங்கினர். முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிற பேரணி இது என்பதை விளக்கிச் சொல்லியும் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. சில நிமிடங்கள் பேச்சு நடந்தது. ஆனாலும் போலீசார் பிடிவாதமாக இருந்தனர்.

சீமான் கைது

எனவே தடையை மீறி, நடைப் பயணத்தைத் தொடர்ந்தார் சீமான். இதனால் அவரை உடனடியாக கைது செய்து வேனில் ஏற்றினர் போலீசார். அவருடன் வந்த 1000-க்கும் மேற்பட்டவர்களையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.

முதல் கைது

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு நாம் தமிழர் கட்சி நடத்திய பரபப்புரை நிகழ்வுக்காக சீமான் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை.

மனச்சோர்விலிருந்து விடுபட - Tamil Health Tips from Tamil Stories Blogspot

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான்.

கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தபோதுதான் அந்த விபரீதம் நடந்தது. அவர் தற்கொலைக்கு முயன்றார் என்று மருத்துவமனையில் சேர்த்தார்கள். ‘திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லை. மாப்பிள்ளை பிடிக்கவில்லை’ என்றெல்லாம் பல காரணங்கள் சொல்லப்பட்டன.

அவரது உடம்பில் இருந்த ரத்தக் காயங்களைப் பார்த்த மருத்துவர்கள், அவருக்கு வந்திருக்கும் பிரச்னையை ஆழமாக அலசிப் பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் தனக்குத்தானே ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதைப் பார்த்து ரசிப்பதில் ஒருவித சந்தோஷத்தை கவிதா அனுபவித்து வந்த உண்மை தெரியவந்தது. கத்தியாலும் பிளேடாலும் அவர் தன் கைகளில் அறுத்துக் கொண்டிருக்கிறார்.

‘‘கவிதா ஒரு வகையான சைக்கோடிக் மனச்சோர்வால் (Psychotic Depression) கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். உடனே சிகிச்சைக்கு உட்படுத்தினால்தான் அவரைக் குணப்படுத்த முடியும்’’ என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள்.

மனச்சோர்வு நோய்களிலேயே மிகக் கொடுமையானது சைக்கோடிக் மனச்சோர்வுதான். இவர்களிடம் அடிப்படையான சில குறைகள் வெளிப்படையாகத் தென்படும். சக மனிதர்கள் மீது வெறுப்பு, மற்றவர்களால் கைவிடப்பட்டு விட்டோமோ என்ற மனநிலை, இதனால் பிரச்னைகளில் இருந்து விடுபட உயிரை மாய்த்துக் கொள்வதுதான் ஒரேவழி என்ற எண்ணம் எழும். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு, சகஜநிலைக்கு வந்தவர்கள்போல் காணப்படுவார்கள்.

சைக்கோடிக் மனச்சோர்வு, லட்சத்தில் நூறு பேருக்கு இருக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. அந்த நூறு பேரில் ஒருவராக நாம் இருக்கக்கூடாது என்றால் கீழ்க்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடனே மருத்துவரைக் கலந்தாலோசிக்க வேண்டும்.

அறிகுறிகள்:

நம்பிக்கைக்குரியவர்களே கைவிட்டது போன்ற உணர்வு அடிக்கடி எழுதல், மனதை ஒரு முகப்படுத்த முடியாமை, சின்னச் சின்ன விஷயங்களில் கூட தீர்மானம் எடுக்க முடியாமை, சுற்றியிருப்பவர்களுடன் சகஜமாகப் பேசிப் பழகமுடியாத நிலை, பொழுது போக்குகளில் ஆர்வமின்மை, யாரோடும் ஒத்துப் போகாமல் எதையும் எதிர்க்கும் மனப்பான்மை, அமைதியின்மை, எரிந்து விழுதல், பசியின்மை, பாலியலில் ஈடுபாடின்மை, அடிக்கடி தலையில் பாரம், என்று இந்த நோய்க்கு பல அறிகுறிகள் இருக்கின்றன.

மூளையில் உள்ள செரட்டோனின் என்ற இரசாயனப் பொருளின் மாற்றத்திற்குத் தக்கவாறுதான் மனச்சோர்வு மனிதனைத் தாக்குகிறது. அந்த இரசாயனத்தை சமநிலையில் வைத்திருக்கக் கூடிய மருந்துகள், சிகிச்சைகள் இப்போது எல்லா நாடுகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

கூடியமட்டிலும் சில பயிற்சிகளை நாள்தோறும் கடைப்பிடித்துவந்தால் சைக்கோடிக் மனச்சோர்வு நோய் நம்மை அண்டாது பாதுகாக்க முடியும். அவற்றுள் சில:

1. உடற் பயிற்சிகள்:

காலையில் எழுந்ததும். பூனை தன் உடலை நீட்டி சோம்பல் முறிப்பதைப் பார்த்திருக்கிறோம். இதேபோல் நாமும் உடலை நீட்டி பயிற்சி செய்தால் மூட்டுக்களிலும் தசைகளிலும் உள்ள விரைப்புகள் நீங்கி, மூளைக்கு நிறைய ரத்தம் பாயும். சுறுசுறுப்புத் தானாக வரும்.

இது தவிர, ஸ்கிப்பிங், ஓடுதல், அதிகாலை நடைப்பயிற்சி ஆகியவை அவசியம்.

2. யோகா, தியானம்:

ஒருவருக்குப் போதிய நேரமும் விருப்பமும் இருந்து யோகா செய்தால் போதும், உளச்சோர்வு நோய் அருகில் வரவே வராது. ஏனென்றால் உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே இணையச்செய்வது யோகா பயிற்சி மட்டுமே.

அதேபோல், குளித்து முடித்தவுடன், கண்களை மூடிக்கொண்டு, மனதில் வரும் எந்தப் பொருளின் மீதும் மனதைச் செலுத்தி ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு சில நிமிடங்கள் தியானம் செய்வதால் மனதிற்குப் புத்துணர்ச்சியும், சிந்தனைத் தெளிவும் கிட்டும்.

3. உணவில் கட்டுப்பாடு:

எடை அதிகரிப்பும், உடல் பருமனும்தான் சைக்கோடிக் மனச்சோர்வு நோய்க்கு ஆரம்பகால நுழைவாயில்கள் (நோய் தாக்கிய பின்னர் உடல் இளைத்துவிடும் என்பது வேறு விஷயம்). அதற்குக் கட்டுப்பாடான உணவுதான் சிறந்த சிகிச்சை. காய்கறிகள், பழங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நெய், பாலாடைகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

4. புகை, மது கூடாது:

புகை பிடிப்பதால் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படும். அதனால் சைக்கோடிக் மனச் சோர்வு நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம். இந்நோய் தாக்கப்பட்டவர்கள் மதுவுக்கு அடிமையாகி பல விபரீத முடிவுகளை எடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் இரண்டுமே முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

5. நிம்மதியான தூக்கம்:

ஒருநாளைக்கு 6 மணி நேரமாவது நல்ல தூக்கத்தில் இருக்க வேண்டியது அவசியம். களைத்துப்போன உடலுக்கும் மனதிற்கும் நல்ல தூக்கத்தால்தான் புத்துணர்ச்சி தரமுடியும். குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குப்போவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

6. வேலையில் அக்கறை:

செய்யும் வேலையில் அதிக அக்கறை எடுத்து ஒருமனத்துடன் செயல்பட்டால் மனச்சோர்வுக்கு இடமே இருக்காது. வேலை நேரத்தைத் திட்டமிடத் தெரியாதது, அளவுக்கு அதிகமான வேலைப் பளுவை இழுத்துப் போட்டுக்கொள்வது, மனச்சோர்வை தூண்டக்கூடியவை. இவற்றைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

7. போட்டி மனப்பான்மையைத் தவிர்த்தல்:

தேவையற்ற, முறையற்ற பேராசையையும் போட்டியையும் தவிர்க்க வேண்டும். போட்டி மனப்பான்மை வளர வளர, மனம் பலவீனப்படுவதோடு, எப்போதும் எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் சச்சரவுகளையுமே சந்திக்க வேண்டிவரும். இவைதான் பலருக்கு மனச்சோர்வு நோய் வரக் காரணம்.

8. சமுதாயத்தோடு ஒத்துப்போதல்:

நல்ல சமூக உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் இரு தரப்பிலும் நல்ல துணையை, தோழமையை உருவாக்கும். உறவுகளுடன் சேர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களில் கலந்துகொள்வது, இசை, பாட்டு என்று கேட்பதும், கற்றுக்கொள்வதும் சமூக உறவோடு கலப்பதற்கு உதவும்.

சைக்கோடிக் மனச்சோர்வு அளவிற்கு அதிகமாக இருக்கும்போது, நரம்பு மண்டலம் சிதைந்து விடும். அச்சம், சோர்வு, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமை என்று தோன்றி பல விபரீத செயல்களுக்கு இட்டுச் செல்லும். அதனால், மேலே சொன்ன அறிகுறிகள் தென்பட்டவுடன், ஒரு நல்ல மருத்துவரிடம் சென்று, உடலையும் மனதையும் முழு செக்கப் செய்துகொள்வது பல வழிகளிலும் உதவக்கூடும்.

திப்பு சுல்தான் வேடத்தில் கமல்!

இந்திய சரித்திரத்தில் முக்கிய இடம் பெற்ற வரலாற்று நாயகனான திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளார் கமல் ஹாஸன்.

18-ம் நூற்றாண்டில் இந்தியாவின் முக்கிய சமஸ்தானமாகத் திகழ்ந்த மைசூரின் மன்னராகத் திகழ்ந்தவர் திப்பு சுல்தான். போர்க் கலை, ஆட்சித் திறன், பொருளியல் நிர்வாகம் என பலவற்றில் மிகச் சிறந்தவராகத் திகழ்ந்தவர் திப்பு.

பிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியனின் இந்திய பிரதிநிதியாகக் கருதப்பட்டவர்.

திப்பு சுல்தானின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய படம் ஒன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் தயாராகிறது.

இந்தப் படத்தில் திப்பு சுல்தானாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல் ஹாஸன். ஜான் பால் இந்தப் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். வயலார் மாதவன் இயக்குகிறார்.

'திப்புவும் உன்னியர்ச்சயும்' என இந்தப் படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. தமிழ் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.

பழஸ்ஸி ராஜா படத்தைத் தயாரித்த கோகுலம் கோபாலன், இந்தப் படத்தை பிரமாண்ட செலவில் தயாரிக்கிறார். உன்னியர்ச்சா என்பது ராணியின் பெயர். வடக்கு மலபார் பகுதியை ஆட்சி செலுத்திய உன்னியர்ச்சா பெரிய வீராங்கனையாவார். திப்பு மற்றும் உன்னியர்ச்சா சம்பந்தப்பட்ட பகுதியை மட்டும் படமாக்குகிறார்கள்.

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, கோகுலம் கோபாலன் நேற்று திருவனந்தபுரத்தில் அறிவித்தார்.

யாரை யாரிடமிருந்து பிரித்தாலும், எங்கு அனுப்பினாலும் நெஞ்சுரத்துடன் பணியாற்றுவோம்- கருணாநிதி

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள். அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் தனிச் செயலாளர் சண்முகநாதனின் தம்பி சிவாஜியின் மகன் சுதர்சன்-துர்கா தேவி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. திருமணத்தை கருணாநிதி தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில்,

சண்முகநாதன் என் பிள்ளைகளில் மூத்த பிள்ளை. என்னை வழி நடத்தி செல்பவர் அவர் என்றால் மிகை ஆகாது. அறிவு கூர்மையும், என் குடும்பத்தின் மீது அன்பும், தனிப்பட்ட முறையில் என் மீது பாசமும் கொண்டவர்.

தி.மு.க.வில் சொற்பொழிவாளனாக நான் சுற்றி திரிந்த காலத்தில் நான் பார்த்து இருக்கிறேன். நான் பேசிய கூட்டங்களுக்கெல்லாம் வந்து குறிப்பு எடுப்பார். எதிர்க்கட்சியினரின் பேச்சை குறிப்பு எடுத்து அரசுக்கு அனுப்பும் போலீஸ் சி.ஐ.டி. அவர் என்பதை தென்னவன் மூலம் தெரிந்து கொண்டேன்.

1967-ல் நான் அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது இவர் எப்படி குறிப்பு எடுத்து இருந்தார் என்பதை கோப்புகளை பார்த்து தெரிந்து கொண்டேன். என் பேச்சில் ஒரு வரி பிசகாமல் குறிப்பு எடுத்து இருந்தார். அவரது திறமையை பார்த்து எனது சுருக்கொழுத்தராக அவரை நியமிக்கும்படி அண்ணாவிடம் கேட்டேன். அவரும் சண்முகநாதனை எனது உதவியாளராக நியமித்தார். அன்று முதல் இன்று வரை எனது உதவியாளராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை காரணமாக நான் கைப்பட எழுதுவது இல்லை. கலைஞர் கடிதம், அறிக்கைகள் மற்றும் கட்டுரைகளை நான் வாய்மொழியாக சொல்ல சண்முகநாதன் எழுதி வெளியிடுகிறார். சண்முகநாதன் இல்லாவிட்டால் கருணாநிதி இல்லை என்று நான் சொல்வேன். இன்றளவும் என்னோடு இருந்து எனது பணிகளை ஆற்றி வருகிறார்.

விஜயாலயசோழன் கணைகளை இழந்து போர்க்களத்துக்கு தன்னந்தனியாக வந்ததுபோல், யாரை நம்மிடம் இருந்து பிரித்தாலும், யாரை எங்கு அனுப்பி வைத்தாலும் கழகத்தை காக்கும் உறுதியையும், நெஞ்சுரத்தையும் பெரியாரும், அண்ணாவும் நமக்கு அளித்திருக்கிறார்கள்.

அதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். இந்த விழாவில் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. நாடு போகும் போக்கை பார்த்தால் நமது கலை, கலாச்சாரம், நாகரீகத்துக்கு எதிர்காலம் உண்டா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

தமிழ் வருடத்தை மாற்றி விட்டதாக கூறுகிறார்கள். ஆண்டாண்டாக கொண்டாடியதை மாற்றலாமா? என்றெல்லாம் கேட்கிறார்கள்? தெருவில் போவோர்களா மாற்றினார்கள்? இன்றைக்கு நாங்களாக எதையும் மாற்றவில்லை.

1921-ல் மறைமலை அடிகள் தலைமையில் 500 தமிழ் புலவர்கள் செந்தமிழ் கற்றோர் கூடி பச்சையப்பன் கல்லூரியில் நடத்திய கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் தை ஒன்று என்பதுதான். அதுதான் தமிழ் ஆண்டின் தொடக்க நாள்.

திருவள்ளுவர் பெயரால் ஆண்டு கணக்கை தொடங்க வேண்டும் என்று எண்ணத்தில் அது அறிவிக்கப்பட்டது. அவர்கள் என்ன ஒன்றும் தெரியாதவர்களா? தமிழை உணராதவர்களா? மரபை அறியாதவர்களா? இதற்கு எல்லாம் நம்முடைய பதிலை செயல்மூலம் காட்ட வேண்டும்.

அதற்கான காலம் வெகு தூரத்தில் இல்லை. சண்முகநாதனை போல வலிமை இருக்குமானால் அந்த நிலையை உருவாக்கிடலாம். நாகரீகம், கலை, காலாச்சாரம், பண்பாடு வாழ என்றென்றும் துணை நிற்போம் என்றார் அவர்.

கல்சிலைபோல்! கல்சிலைபோல்! - விவேகானந்தர்

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.
ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

யாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்- சீமான்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிரபராதிகளான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மறுக்கப்பட்ட நீதியைத்தான் நாங்கள் கேட்கிறோமே தவிர யாரிடமும் உயிர்ப் பிச்சை கேட்கவில்லை என்று நாம் தமிழர் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத் இடைக்காலத் தீர்ப்பு குறித்து சீமான் கருத்து தெரிவிக்கையில்,

தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. நீதிக்கு கிடைத்த வெற்றி. நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கவில்லை. மறுக்கப்பட்ட நீதியைத்தான் கேட்கிறோம்.

சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியுடன் திரண்டு வந்து போராட்டம் நடத்தினார்கள். இடைக்கால தடை உத்தரவு, அந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. செங்கொடியின் அர்ப்பணத்திற்கு கிடைத்த வெற்றி.

தூக்கு தண்டனையை ரத்து செய்யுமாறு முதல்வர் ஜெயலலிதா தாயுள்ளத்தோடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்சினையை தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று மரண தண்டனையை ரத்துசெய்ய தொடர்ந்து போராடுவோம் என்றார் அவர்.

வெற்றியின் முதல் படி - பேரறிவாளன், சாந்தன், முருகனை தூக்கிலிட 8 வாரங்களுக்குத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்.

டெல்லியிலிருந்து பிரபல வக்கீல்கள் ராம்ஜேத்மலானி, மோஹித் செளத்ரி, காலின் கோன்சாலின் ஆகியோர் வழக்கில் ஆஜராக வந்தனர். மூவரின் வக்கீல்களான துரைசாமி, சந்திரசேகர் ஆகியோரும் அவர்களுடன் வந்திருந்தனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்களும் குவிந்து விட்டனர்.

வழக்கை விசாரித்த பெஞ்ச், அதை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து 8 வார இடைக்காலத் தடையை அறிவித்தது.

உற்சாக வெள்ளத்தில் ஸ்தம்பித்தது உயர்நீதிமன்றம்

இதைக் கேட்டதும் வக்கீல்கள் உற்சாகக்குரல் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் உயர்நீதிமன்ற வளாகத்தில் திரண்டிருந்த வரலாறு காணாத மிகப் பெரிய வக்கீல்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் கூட்டமும் பூரிப்பில் மூழ்கியது.

அனைவரும் பரஸ்பரம் மகிழ்ச்சி தெரிவித்து முழக்கமிட்டதால் உயர்நீதிமன்றமே கிட்டத்தட்ட ஸ்தம்பித்துப் போனது.

தமிழகம் முழுவதும் கொண்டாட்டம்

தூக்குத் தண்டனை 8 வாரங்குக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தமிழகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவியது. இதையடுத்து ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சி முழக்கமிட்டும் சந்தோஷத்தைப் பகிர்நது கொண்டனர்.

பொதுமக்களும் மகிழ்ச்சி

பொதுமக்களுக்கும் இந்த உத்தரவு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?

முன்னதாக தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் சார்பில் நேற்று வழக்கறிஞர் தடா சந்திரசேகர் ரிட் மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த மனுக்களில், 1991-ல் கைது செய்யப்பட்ட நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். எங்களுக்கு தூக்கு தண்டனை விதித்து 1998 ஜனவரியில் தடா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை உறுதி செய்து 1999 மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு தமிழக ஆளுநருக்கு நாங்கள் 2 முறை அளித்த கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும். மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

மேலும், கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின் மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம். வாழ்வோமா, சாவோமா எனத் தெரியாமல் 11 ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் நாங்கள் தனிமைச் சிறையில் தவித்த தவிப்பும், அனுபவித்த சித்திரவதையும் மரண தண்டனையை விடவும் மிகக் கொடுமையானது.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

காப்பாற்ற முடியும்-ராம்ஜேத்மலானி:

முன்னதாக உயர்நீதிமன்றத்திற்கு வந்த ராம்ஜேத்மலானியிடம் செய்தியாளர்கள் வழக்கின் தன்மை குறித்து கேட்டபோது, இது மிகவும் சவாலான வழக்கு. இருப்பினும் திறமையாக வாதாடினால் நிச்சயம் மூவரையும் காப்பாற்ற முடியும். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

மூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்; மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை - உயர்நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.

இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.


குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.

மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட், மூவரையும் தூக்கில் போட 8 வாரம் தடை விதித்தது.


3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌ர், ஜெயல‌லிதாவு‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் பே‌ர் கடித‌ம்

பேர‌றிவாள‌ன், சா‌‌ந்த‌‌ன், முருக‌ன் ஆ‌‌கியோ‌ரின் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்‌ய‌க் கோ‌ரி சேல‌த்‌தி‌ல் ஒரு ல‌ட்ச‌ம் பே‌ர் ‌பிரதம‌ர், த‌மிழக முதலமை‌ச்ச‌ர், ஆளுந‌ர் ஆ‌கியோரு‌க்கு கடித‌ம் அனு‌ப்பு‌கி‌ன்றன‌ர். மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ர் ரா‌ஜி‌வ்கா‌ந்‌தி கொலை வழ‌க்‌கி‌ல் தூ‌க்கு‌த் த‌ண்டனை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு சேல‌ம் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள பேர‌றிவாள‌ன், சா‌‌ந்த‌‌ன், முருக‌ன் ஆ‌‌கியோ‌ரு‌க்கு வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி த‌ண்டனை ‌நிறைவே‌ற்ற‌ப்பட உ‌ள்ளன. இ‌ந்த தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி த‌மிழக‌ம் முழுவது‌ம் இர‌யி‌ல் ம‌‌றிய‌ல், ம‌னித ச‌ங்‌கி‌லி, உ‌ண்ணா‌விரத‌ம் உ‌ள்‌ளி‌ட்ட ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் போரா‌ட்ட‌ங்க‌ள் நடைபெ‌ற்று வரு‌கிறது. இ‌ந்த ‌நிலை‌யி‌ல் 3 பே‌ரி‌ன் தூ‌க்கு‌த் த‌ண்டனையை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், த‌மிழக முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா, ஆளுந‌ர் ஆ‌கியோரு‌க்கு ஒரு ல‌ட்ச‌ம் கடித‌ம் அனு‌ப்பு‌ம் போரா‌ட்ட‌‌ம் சேலத்தில் இ‌ன்று நடைபெ‌ற்று வரு‌கிறது. ஏராளமானோ‌ர் ஒரே நேர‌த்‌தி‌ல் கடித‌ம் எழுது‌ம் ப‌ணி‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அவ‌ர்க‌ள் அனைவரு‌ம் ஒரே நேரத்தில் கடித‌ங்க‌ள் அனு‌ப்ப உ‌ள்ளன‌ர்.

மூ்ன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதம்

வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றக் கோரி டெல்லியில், தூக்குத் தண்டனைக்கான மாணவர் அமைப்பு சார்பில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு

இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.

இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

சிங்கள வீரர்களை மன்னித்தது தான் பிரபாகரன் செய்த ஒரே தவறு: சீமான்

சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் பிரபாகரன் செய்த ஒரே தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்றிரவு பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய சீமான் கூறியதாவது,

ஒவ்வொரு நொடியும் உயிர் நொடி தான். இந்திய, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையை தீவிரவாதிகள் தாக்கினர். உடனே பயந்துபோன இங்கிலாந்து அணி இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று கூறி நாடு திரும்பியது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தைரியமாக விளையாடலாம் என்றது மத்திய அரசு. அந்த மாநிலம் நம் தமிழகம் தான்.

போர்க்குற்றவாளியான ராஜபக்சே மீது விசாரணை நடத்தக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனால் தான் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவித்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது மத்திய அரசு.

2 ஆண்டுகளாக என் இன மக்கள் காப்பாற்றச் சொல்லி கதறிக் கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கப்போவதில்லை. எங்களிடம் தான் உயிர் பிச்சை கேட்பார்கள்.

சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் செய்த ஒரே தவறு ஆகும். மன்னிப்பது தான் மாண்பு. மரண தண்டனையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் என்றார்.

வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!

மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிடியை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளனை காக்கக் கோரி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் முழக்கம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முழக்கமிட்டார். பின்னர் தூக்கு தண்டனையை எதிர்த்து அவர் வெளிநடப்பு செய்தார்.

மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் திருமாவளவன்.

அவையின் மையப் பகுதிக்குச் சென்ற அவர் அட்டையை உயர்த்தி பிடித்து மூன்று பேரின் தூக்கு தண்டனையயும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார். பின்னர் அவர் வெளிநடப்பு செய்தார்.

வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையையே மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.

சேலத்தில் ரயில் மறியல்:

இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரியில் மனித சங்கிலி:

அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.

முதல்வரை சந்திப்பேன், பேரறிவாளனை மீட்பேன்-தாய் அற்புதம்மாள்:

இந் நிலையில் பேரறிவாளனின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் என் மகனுக்கு தூக்கு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை தண்டனையில் இருந்து மீட்போம்’. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிடுவேன் என்றார்.

வேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தித்தார் வைகோ

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இந் நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார்.

முன்னதாக நேற்று பேரறிவாளன் எழுதிய நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு-உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,

மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.

மத்திய அரசு இந்தக் கட்டத்தில் கூட இதைத் தடுத்து நிறுத்த முடியும். எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.

முதல்வர் கையில் தான் உள்ளது-பேரறிவாளனின் தந்தை:

இந் நிலையில் இந்த மூவரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.

குயில்தாசன் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது. எனது மகனை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு அவரை வேண்டுகிறேன் என்றார்.

மங்காத்தா... பின்வாங்கியது ஸ்டுடியோ கிரீன்!!

மங்காத்தா படம் குறித்த லேட்டஸ்ட் செய்தி இது... அந்தப் படத்தை வாங்கிய ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், இப்போது பின்வாங்கிவிட்டது!

அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பட விவகாரத்தில் நடக்கும் திடீர் மாறுதல்களுக்கு இணையாக திருப்பங்கள் அந்தப் படத்தில் கூட இருக்குமா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தை மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்க ஆரம்பித்த போது, திமுக ஆளும் கட்சி. அதனால் செல்லப்பிள்ளை கணக்காக போஷாக்குடன் வளர்ந்தது படம். வெளியிடுவதிலும் சிக்கல் இருக்காது என்பதால் வாங்கிக் கொள்ள நிறைய விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.

ஆட்சி மாற்றம் நடந்ததும், எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இப்போது தயாநிதி அழகிரியை படத்தின் மைனஸாக பார்க்க ஆரம்பித்துவிட்டது அதே விநியோகஸ்தர் தரப்பு. தியேட்டர் தர உரிமையாளர்கள் தயங்கும் நிலை.

எனவே படத்தை கைமாற்றிவிட முடிவு செய்தார் தயாநிதி. பொதுவாக வேறு யார் படம் தயாரித்தாலும், அதை கடைசியில் தயாநிதி, உதயநிதி அல்லது சன் டிவிக்கு விற்றுவிட்டுப் போவதுதான் கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்தது. இப்போது முதல்முறையாக தயாநிதி அழகிரி அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தப் படத்தை இவர் வாங்கப் போகிறார், அவர் வாங்கப் போகிறார் என ஏகப்பட்ட யூகங்கள்.

கடைசியில் நடிகர் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.

ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அவர் பின் வாங்கிவிட்டார் மங்காத்தாவிலிருந்து. இதற்கு பின்னணியாக பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான காரணம் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன்டிவிக்கு விற்கப்பட்டதுதான் என்கிறது விவரமறிந்த தரப்பு. ஆனால் இதுகுறித்து விரிவாக பேச மறுத்துவிட்ட ஞானவேல் ராஜா, மங்காத்தா படத்தை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வளவுதான் என்றார்.

தயாநிதி அழகிரி இதுபற்றி தனது ட்விட்டரில், "மங்காத்தா ஸ்டுடியோ கிரீன் பேனரில் வெளியாகாது. ஆனால் நிச்சயம் ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகிவிடும்," என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More