skip to main |
skip to sidebar
1:55 PM
ரா: அரசகுமாரன்
வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள மூவரைக் காப்பாற்றக் கோரி டெல்லியில், தூக்குத் தண்டனைக்கான மாணவர் அமைப்பு சார்பில் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்த இவர்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட யாரையும் தூக்கில் போடக் கூடாது. தூக்குத் தண்டனையை இந்தியாவிலிருந்து ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
இந்த திடீர் போராட்டத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல்-அண்ணா சாலை ஸ்தம்பிப்பு
இதற்கிடையே, சென்னையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இன்று அண்ணா சாலையை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் பெரும் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
சைதாப்பேட்டை பனகல் மாளிகை முன்பு இன்று காலை மாணவ, மாணவியர் பெரும் திரளாக கூடினர். அங்கிருந்து ஊர்ர்வலமாக ஆளுநர் மாளிகைக்கு செல்ல அவர்கள் திட்டமிட்டனர். இதையடுத்து போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். ஊர்வலம் போகக் கூடாது என்று அவர்கள் மாணவ, மாணவியரை தடுத்து நிறுத்தினர். ஆனால்அதை மீறி அவர்கள் செல்ல முயன்றதால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் அப்படியே அண்ணா சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் குதித்தனர்.
இதநால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு எந்த வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
12:46 PM
ரா: அரசகுமாரன்
சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் பிரபாகரன் செய்த ஒரே தவறு என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி நேற்றிரவு பாளையங்கோட்டை ஜவகர் திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய சீமான் கூறியதாவது,
ஒவ்வொரு நொடியும் உயிர் நொடி தான். இந்திய, இங்கிலாந்து அணிகள் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியபோது மும்பையை தீவிரவாதிகள் தாக்கினர். உடனே பயந்துபோன இங்கிலாந்து அணி இந்தியா பாதுகாப்பான நாடு அல்ல என்று கூறி நாடு திரும்பியது. அதே நேரம் இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் தைரியமாக விளையாடலாம் என்றது மத்திய அரசு. அந்த மாநிலம் நம் தமிழகம் தான்.
போர்க்குற்றவாளியான ராஜபக்சே மீது விசாரணை நடத்தக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதனால் தான் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை அறிவித்து மாநில அரசுக்கு நெருக்கடி கொடுக்கிறது மத்திய அரசு.
2 ஆண்டுகளாக என் இன மக்கள் காப்பாற்றச் சொல்லி கதறிக் கொண்டிருக்கின்றனர். இனி நாங்கள் யாரிடமும் உயிர் பிச்சை கேட்கப்போவதில்லை. எங்களிடம் தான் உயிர் பிச்சை கேட்பார்கள்.
சரண் அடைந்த 15 ஆயிரம் சிங்கள் வீரர்களை மன்னித்து அனுப்பியது தான் என் தலைவன் செய்த ஒரே தவறு ஆகும். மன்னிப்பது தான் மாண்பு. மரண தண்டனையை ஒழிப்போம், மனித நேயம் காப்போம் என்றார்.
10:35 AM
ரா: அரசகுமாரன்
மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.
விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.
பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிடியை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.
விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
12:32 PM
ரா: அரசகுமாரன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் முழக்கமிட்டார். பின்னர் தூக்கு தண்டனையை எதிர்த்து அவர் வெளிநடப்பு செய்தார்.
மூவரின் தூக்கு தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதிய அட்டையை ஏந்தியபடி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார் திருமாவளவன்.
அவையின் மையப் பகுதிக்குச் சென்ற அவர் அட்டையை உயர்த்தி பிடித்து மூன்று பேரின் தூக்கு தண்டனையயும் உடனே ரத்து செய்ய வேண்டும் என்று ஆங்கிலத்தில் முழக்கமிட்டார். பின்னர் அவர் வெளிநடப்பு செய்தார்.
வெளியே நிருபர்களிடம் பேசிய அவர், பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை மத்திய அரசு உடனே ரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்.
மரண தண்டனை கொள்கையையே மத்திய அரசு கைவிட வேண்டும் என்றார்.
சேலத்தில் ரயில் மறியல்:
இந் நிலையில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.
தர்மபுரியில் மனித சங்கிலி:
அதே போல இந்த மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி தர்மபுரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பாமக, மதிமுக மற்றும் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் இதில் கலந்து கொண்டனர்.
முதல்வரை சந்திப்பேன், பேரறிவாளனை மீட்பேன்-தாய் அற்புதம்மாள்:
இந் நிலையில் பேரறிவாளனின் தாயார் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் என் மகனுக்கு தூக்கு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை தண்டனையில் இருந்து மீட்போம்’. இது குறித்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிடுவேன் என்றார்.
4:56 PM
ரா: அரசகுமாரன்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வேலூர் மத்திய சிறையில் சந்தித்துப் பேசினார்.
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்குத் தண்டனையை உறுதி செய்யும் ஜனாதிபதி அலுவலக உத்தரவு (கருணை மனு ரத்து ) நகல் இன்று வேலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.
இந் நிலையில் மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று வேலூர் சிறையில் மூவரையும் சந்தித்துப் பேசினார்.
முன்னதாக நேற்று பேரறிவாளன் எழுதிய நூலின் இந்திப் பதிப்பு டெல்லியில் வெளியிடப்பட்டது. வைகோ தலைமையில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியத் தலைவர் ஏ.பி.பரதன் கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஏற்கனவே வெளிவந்துள்ள ராஜீவ் காந்தி கொலை வழக்கு-உண்மை கடிதங்கள் என்ற இந்தி மொழி பெயர்ப்பின் பணியை எழுத்தாளர் சரவணா ராஜேந்திரன் செய்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின் நிருபர்களிடம் வைகோ கூறுகையில்,
மத்திய அரசு நினைத்தால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய முடியும். தமிழ்நாட்டு முதல் அமைச்சர் அவர்கள், கருணை உள்ளத்தோடு, தாய் உள்ளத்தோடு இந்த மூன்று உயிர்களையும் காப்பற்ற வேண்டும் என்று கட்சியினரையெல்லாம் கடந்து அனைவரும் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம்.
மத்திய அரசு இந்தக் கட்டத்தில் கூட இதைத் தடுத்து நிறுத்த முடியும். எப்படியாவது இந்த மூன்று உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்று கோருகிறோம் என்றார்.
முதல்வர் கையில் தான் உள்ளது-பேரறிவாளனின் தந்தை:
இந் நிலையில் இந்த மூவரின் உயிரைக் காப்பாற்றக் கோரி, ஜோலார் பேட்டை பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் உண்ணாவிரம் நடைபெற்றது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோர் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்றனர்.
குயில்தாசன் கூறுகையில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று பேரின் உரிரை காப்பாற்றுவது தமிழக முதல்வரின் கையில் தான் உள்ளது. எனது மகனை காப்பாற்றி என்னிடம் ஒப்படைக்குமாறு அவரை வேண்டுகிறேன் என்றார்.
10:50 AM
ரா: அரசகுமாரன்
மங்காத்தா படம் குறித்த லேட்டஸ்ட் செய்தி இது... அந்தப் படத்தை வாங்கிய ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், இப்போது பின்வாங்கிவிட்டது!
அஜீத்தின் 50 வது படமான மங்காத்தா பட விவகாரத்தில் நடக்கும் திடீர் மாறுதல்களுக்கு இணையாக திருப்பங்கள் அந்தப் படத்தில் கூட இருக்குமா என்று தெரியவில்லை.
இந்தப் படத்தை மத்திய அமைச்சர் முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்க ஆரம்பித்த போது, திமுக ஆளும் கட்சி. அதனால் செல்லப்பிள்ளை கணக்காக போஷாக்குடன் வளர்ந்தது படம். வெளியிடுவதிலும் சிக்கல் இருக்காது என்பதால் வாங்கிக் கொள்ள நிறைய விநியோகஸ்தர்கள் தயாராக இருந்தனர்.
ஆட்சி மாற்றம் நடந்ததும், எல்லாமே தலைகீழாக மாறிப் போனது. இப்போது தயாநிதி அழகிரியை படத்தின் மைனஸாக பார்க்க ஆரம்பித்துவிட்டது அதே விநியோகஸ்தர் தரப்பு. தியேட்டர் தர உரிமையாளர்கள் தயங்கும் நிலை.
எனவே படத்தை கைமாற்றிவிட முடிவு செய்தார் தயாநிதி. பொதுவாக வேறு யார் படம் தயாரித்தாலும், அதை கடைசியில் தயாநிதி, உதயநிதி அல்லது சன் டிவிக்கு விற்றுவிட்டுப் போவதுதான் கடந்த 5 ஆண்டுகளாக நாம் பார்த்தது. இப்போது முதல்முறையாக தயாநிதி அழகிரி அந்த நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்தப் படத்தை இவர் வாங்கப் போகிறார், அவர் வாங்கப் போகிறார் என ஏகப்பட்ட யூகங்கள்.
கடைசியில் நடிகர் சூர்யாவின் உறவினர் ஞானவேல்ராஜா இந்தப் படத்தை வாங்கி வெளியிடுவதாக நேற்று முன்தினம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது.
ஆனால் அடுத்த இரண்டே நாட்களில் அவர் பின் வாங்கிவிட்டார் மங்காத்தாவிலிருந்து. இதற்கு பின்னணியாக பல காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் முக்கியமான காரணம் படத்தின் தொலைக்காட்சி உரிமை சன்டிவிக்கு விற்கப்பட்டதுதான் என்கிறது விவரமறிந்த தரப்பு. ஆனால் இதுகுறித்து விரிவாக பேச மறுத்துவிட்ட ஞானவேல் ராஜா, மங்காத்தா படத்தை நாங்கள் வெளியிடவில்லை. அவ்வளவுதான் என்றார்.
தயாநிதி அழகிரி இதுபற்றி தனது ட்விட்டரில், "மங்காத்தா ஸ்டுடியோ கிரீன் பேனரில் வெளியாகாது. ஆனால் நிச்சயம் ஆகஸ்ட் 31-ம் தேதி ரிலீஸாகிவிடும்," என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடவிருக்கிறது என்பது லேட்டஸ்ட் தகவல். விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கிறது.